Vote of Confidence: சட்டசபையில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய்
சென்னை: தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் அரசினர் தீர்மானத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று சட்டசபையில் கொண்டு வந்தார். இதன் மீது தற்போது உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை உருவாக்கியுள்ள தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெறுகிறது. முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.
முன்னதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் அரசினர் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதையடுத்து கட்சித் தலைவர்கள் பேசி வருகிறார்கள். முதலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் பேசினார். அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, அமமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, பாமக, மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அதிமுக, எஸ்.பி.வேலுமணி மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் விவரம்:
தவெக - 105 (ஒரு காலியிடம், ஒரு உறுப்பினர் வாக்களிக்கத் தடை, சபாநாயகர் வாக்களிக்க முடியாது)
காங்கிரஸ் - 5
சிபிஐ - 2
சிபிஎம் - 2
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 2
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2
அமமுக - 1
எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக - 30
பெரும்பான்மையை நிரூபிக்க 117 இடங்கள் தேவை என்ற நிலையில் அதையும் தாண்டி மிகப் பெரிய அளவில் விஜய் அரசுக்கு ஆதரவு உள்ளதால் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உண்டு.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. சி.வி. சண்முகம் தலைமையிலான சுமார் 30 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட ஒரு குழு, மக்கள் தீர்ப்பை மதிக்கும் வகையில் விஜய் அரசுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று அவர்களை அவர்களது அலுவலகத்திற்கே போய் முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்து விட்டும் வந்தார்.
எதிர்க்கட்சியான திமுக, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடந்தால், பெரும்பான்மையை நிரூபிப்பது விஜய்க்கு இன்னும் எளிதாகிவிடும்.
காரணம் சபையில் உள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டே வாக்கெடுப்பு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
பாஜக, பாமக நடுநிலை:
விவாதத்தின் மீது பாஜக உறுப்பினர் போஜராஜன் பேசுகையில், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார்.
பாஜகவுக்கு சட்டசபையில் போஜராஜன் மட்டுமே உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பாமக சார்பில் பேசிய டாக்டர் செளமியா அன்புமணியும் தனது பேச்சின் நிறைவில் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருப்பதாக அதாவது நடுநிலை வகிப்பதாக அறிவிததார். பாமகவுக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.