Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

Su.tha Arivalagan
Mar 14, 2026,04:59 PM IST

சென்னை: மேற்கு ஆசிய நாடுகளில் நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் சமையல் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக, இல்லத்தரசிகளின் அத்தியாவசியத் தேவையான சூரியகாந்தி எண்ணெய் (Sunflower Oil) விலை லிட்டருக்கு 170 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


கடந்த ஒரு மாத காலமாகவே சமையல் எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், தற்போது போர் சூழல் விலையேற்றத்தை வேகப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு சுமார் ரூ.155-க்கு விற்பனை செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்து ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதேபோல், ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாம் ஆயில் (Palm Oil) விலையும் லிட்டருக்கு ரூ.110-லிருந்து ரூ.122 ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பிற எண்ணெய்களின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




இறக்குமதி பாதிப்பும் காரணமும்:


இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. குறிப்பாக மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து பாம் ஆயிலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா போன்ற பகுதிகளில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக, சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கப்பல் வாடகை உயர்வு மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் அதிகரிப்பு போன்றவை இறக்குமதி செலவை உயர்த்தியுள்ளன. இந்தியாவில் மாதந்தோறும் சராசரியாக 6 லட்சம் டன் பாம் ஆயில், 3 லட்சம் டன் சோயாபீன் ஆயில் மற்றும் 1 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


மத்திய அரசின் வரி நடவடிக்கை:


கடந்த ஆண்டு ஜூன் மாதம், பொதுமக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 26.5%-லிருந்து 16.5% ஆகக் குறைத்தது. இதனால் அப்போது விலை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போதைய சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் அந்த வரிச்சலுகையையும் மீறி விலையை உயர்த்தியுள்ளன.


ஏற்கனவே காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, சமையல் எண்ணெய் விலையேற்றம் பெரும் சுமையாக மாறியுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும் இந்த விலை உயர்வு மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசு உடனடியாக தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.