சட்டசபையில்.. தவெக விற்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டால் என்ன செய்வார் விஜய்?

Su.tha Arivalagan
May 04, 2026,12:53 PM IST

சென்னை : காலை 11 மணி நிலவரப்படி தவெக., 105 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதை மேலோட்டமாக பார்த்தால் தவெக தான் வெற்றி பெற்று, விஜய் தான் அடுத்த முதல்வர் என தோன்றலாம். ஆனால் தவெக.,விற்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால் விஜய் என்ன செய்வார் என்பது தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.


தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் தவெக 118 இடங்களைக் குறைந்தது பெற வேண்டும். அது சாதாரண மெஜாரிட்டி. அதற்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் கூடுதல் பாதுகாப்பாக அமையும். தற்போதைய நிலையில் தனிப் பெரும்பான்மை பலத்தை இதுவரை தவெக பெறவில்லை.


தவெக தற்போது சட்டசபையில் தனிப் பெரும் கட்சியாக மாறியுள்ளது. ஒரு வேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தொங்கு சட்டசபை அமையும். அதற்குத்தான் தற்போது அதிக வாய்ப்புள்ளது. தவெக ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலைக்கு தவெக தள்ளப்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் விஜய் யாருடைய ஆதரவை கேட்பார் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.




திமுக.,வை ஆரம்பம் முதலே தன்னுடைய கொள்கை எதிரி என விஜய் சொல்லி விட்டதால் கண்டிப்பாக திமுக.,விடம் விஜய் ஆதரவு கேட்க மாட்டார். அதிமுக.,விடம் ஆதரவு கேட்கவும் வாய்ப்பு குறைவு. காரணம், விஜய் ஆட்சி அமைக்க மிக குறைவான சீட் மட்டுமே வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுக, தவெக.,விற்கு ஆதரவு தருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் வேட்பாளராக உள்ளதாலும், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாலும் தவெக அவர்களிடம் ஆதரவு கேட்பதற்கான வாய்ப்பு குறைவு.


காங்கிரஸ் - விசிக - பாமக


இதனால் அடுத்த வாய்ப்பாக காங்கிரஸ், விசிக, பாமக ஆகியோரிடம் ஆதரவு கேட்டு தவெக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க உதவ வாய்ப்புள்ளது. 


தவெக.,வும் ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராக இருந்ததால் தற்போது அவர்களிடம் ஆதரவு கேட்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.


ஒரு வேளை இவர்கள் தவெகவுடன் கைகோர்க்க முன்வந்தால் கூட்டணி ஆட்சியாக தவெக ஆட்சியமைக்க வாய்ப்புகள் உண்டு. எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகுதான் தெரியும்.