விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
சென்னை : தமிழக சட்டசபையில் நேற்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், பிரபல டைரக்டர் ஒருவர் விஜய்யிடம், தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதாகவும், அவருக்கு சீட் தராமல் கட்சி தொண்டர் ஒருவருக்கு விஜய் சீட் கொடுத்ததாகவும் தெரிவித்தது பேசுபொருளாகியுள்ளது.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சட்டசபையில் பேசும் போது, "நாங்கள் அனைவருமே சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். எங்களை பார்த்து பயப்பட வேண்டாம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் வந்திருக்கிறோம்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட பலரும் சீட் கேட்டாலும் கட்சியின் அடிமட்ட தொண்டருக்கு மட்டும் தான் சீட் கொடுப்பது என்பதில் எங்கள் தலைவர் உறுதியாக இருந்தார். கட்டிட வேலை செய்யும் சாதாரண தொழிலாளியான ஒருவருக்கு சீட் கொடுக்கும்படி எங்கள் தலைவர் சொன்னார் நான் கூட அவரிடம் கேட்டேன், கட்டிட தொழிலாளிக்கு சீட் தருகிறீர்களே அவரிடம் தேர்தலுக்கு செலவு செய்யக் கூட பணம் இருக்காது. அவர் எப்படி வெற்றி பெறுவார் என கேட்டேன்.
அதற்கு எங்கள் தலைவர், அவரை டெப்பாசிட் பணத்தை மட்டும் கட்ட சொல்லுங்கள். அவர் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பிக்கையுடன் சொன்னார். அவர் சொன்னபடியே சீட் கொடுக்கப்பட்டு, வெற்றி பெற்றார்.
அதேபோல பிரபல டைரக்டர் ஒருவர் கூட சீட் கேட்டார். ஆனால் நீங்க கேட்கும் தொகுதியில், எனக்காக ஆரமப் காலத்திலிருந்து என்னுடன் இருக்கும் ரசிகருக்கு சீட் கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஸாரி நண்பா என்று கூறி விட்டார் என்று கூறியிருந்தார்.
பிரபல இயக்குநருக்கு சீட் தராமல் தனது ரசிகருக்கு கொடுத்த அந்தத் தொகுதிதான் கிணத்துக்கடவு. அதில் வெற்றி பெற்ற விக்னேஷ்தான் இன்று மது விலக்குத்துறை அமைச்சராக இருக்கிறார்.
யார் அந்த பிரபல டைரக்டர்?
புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவலால், அரசியல் களத்திலும் சினிமா வட்டாரத்திலும், "விஜய்யிடம் சீட் கேட்டு, விஜய்யால் நிராகரிக்கப்பட்ட அந்த பிரபல டைரக்டர் யார்?" என்ற கேள்வி பரபரப்பாக கேட்கப்பட்டு வருகிறது. சோஷியல் மீடியாவிலும் இது தான் ஹாட் டாக்காக இருந்து வருகிறது.
விஜய்யிடம் சீட் கேட்டுள்ளார் என்றால், அந்த டைரக்டர் நிச்சயமாக விஜய்யை வைத்து படம் இயக்கிய டைரக்டர்களில் ஒருவராக தான் இருக்க வேண்டும் என யூகித்து, விஜய்யை வைத்து படம் இயக்கிய டைரக்டர்கள் லிஸ்டை எடுத்து, இவர்களின் யார் சீட் கேட்டிருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
விஜய்யை வைத்து படம் இயக்கிய டைரக்டர்கள் லிஸ்ட் ஒரு புறம் இருக்கட்டும். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா டைரக்டர்கள் யார் என்று பார்த்தால் ஒரே ஒருவர் மட்டும் தான். அது மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட டைரக்டர் சுந்தர்.சி மட்டும் தான். இவரது சொந்த ஊர் ஈரோடு தான். ஆனால் இவர் தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், புதிய நீதிக்கட்சி சார்பில் தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
டைரக்டர் சுந்தர்.சி.,யின் மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பு, பாஜக.,வில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு கடந்த முறை லோக்சபா தேர்தலில் கொடுத்தது போல் இந்த முறை சட்டசபை தேர்தலில் சீட் தரவில்லை.
ஒருவேளை தனக்கு பதிலாக தனது கணவருக்கு சீட் கொடுக்கும் படி பாஜக.,விடம் குஷ்பு தரப்பில் கேட்கப்பட்டிருக்கலாம். பாஜக தலைமை சீட் தர மறுத்ததால், விஜய்யிடம் சென்று சீட் கேட்டிருக்கலாம். தேர்தலுக்கு முன்பு குஷ்பு, விஜய்யை சந்தித்து பேசிய போட்டோக்கள் கூட வெளிவந்தன. விஜய் வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆன பிறகும் தனது மகளின் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று நேரில் அழைப்பு விடுத்தார் குஷ்பு. பாஜக, தவெக இரண்டு கட்சிகளுமே சீட் தர மறுத்து விட்டதால், புதிய நீதிக்கட்சி சார்பில் சுந்தர்.சி போட்டியிட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது.
சுந்தர்.சி, விஜய்யை வைத்து படம் எதுவும் இயக்கியது கிடையாது. சுந்தர்.சி தனது கனவு படமான ரூ.350 கோடி மெகா புராஜெக்ட் படமான "சங்கமித்ரா" என்ற வரலாற்று படத்தில் நடிப்பதற்கு விஜய்யை அணுகி உள்ளார். ஆனால் அந்த சமயத்தில் விஜய் பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், இந்த ஒரு படத்திற்காக ஒரு வருடம் முழுவதும் செலவிட முடியாது என கூறி நடிக்க மறுத்துள்ளார். ஆனால் குஷ்பு, விஜய்யுடன் மின்சார கண்ணா, வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அந்த நட்பு ரீதியில் விஜய்யிடம் சுந்தர்.சி.,க்காக சீட் கேட்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் விஜய்யை வைத்து படம் இயக்கிய இயக்குநர் என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருப்பதால் அந்த இயக்குநர் சுந்தர்.சியாக இருக்க முடியாது என்று பேச்சும் உள்ளது.
யாருங்க அந்த இயக்குநர்.. நமக்கே அவரைப் பார்க்கணும் போல இருக்கே!