முழுக்க முழுக்க அதிமுகவில் ஊறிப் போன ஓ.பன்னீர்செல்வம்.. திமுகவுக்கு மாறியது ஏன்?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அரசியலில் தான் தோற்றுப் போய் விடக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே திமுகவில் ஓபிஎஸ் இணைந்திருப்பதாக சொல்கிறார்கள். இன்னொன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், தனக்கு உரிய கெளரவத்தைத் தரும் என்ற நம்பிக்கையும் இருப்பதால்தான் அவர் திமுகவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
முழுக்க முழுக்க அதிமுக ரத்தத்தில் ஊறியிருப்பவர் ஓ.பி.எஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம். ஆரம்பத்திலிருந்தே அவர் அதிமுகதான்.
ஓ.பி.எஸ் தனது அரசியல் பயணத்தை 1973-ல் அதிமுகவில் ஒரு சாதாரணத் தொண்டனாகத் தொடங்கினார். கட்சியின் மீது அவர் கொண்டிருந்த விசுவாசத்தால் படிப்படியாகப் பல பதவிகளைப் பெற்றார். அடக்கம், அமைதி, நிதானம், புன்னகை பூத்த முகம் இவைதான் ஓ.பி.எஸ்ஸின் அடையாளங்களாக மாறிப் போயிருந்தன.
ஜெயலலிதா காலத்தில்தான் இவர் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதா இவரைத்தான் கை காட்டினார். அவர் முதல்வர் பதவியை வகிக்க முடியாமல் போன காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர் ஓ.பி.எஸ்தான். காரணம், இவரது விசுவாசம், சொன்னதைச் செய்பவர், தேவையில்லாத வேலைகளைச் செய்ய மாட்டார் என்பதெல்லாம் இவருக்கு சாதகமாக அமைந்தன.
ஓ.பன்னீர் செல்வம் 1993-ஆம் ஆண்டு பெரியகுளம் நகரக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1996 முதல் 2001 காலகட்டத்தில் பெரியகுளம் நகராட்சித் தலைவராகப் பணியாற்றினார். 2000-ஆம் ஆண்டு தேனி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறிய பிறகு, அதிமுகவின் அதிகாரப் படிநிலையில் முக்கிய இடங்களைப் பிடித்தார். ஜெயலலிதா காலத்தில் பொருளாளராக நியமிக்கப்பட்ட ஓ.பி.எஸ், அவர் மறையும் வரை நீண்ட காலம் கட்சியின் பொருளாளராகப் பணியாற்றினார்.
2017-ல் அதிமுகவின் அணிகள் இணைந்த பிறகு, கட்சியின் உச்சபட்ச பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்றார். கிட்டத்தட்ட கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு இணையானது இது. இப்பதவியில் ஆகஸ்ட் 21, 2017 முதல் ஜூலை 11, 2022 வரை நீடித்தார்.
2001-02, 2014-15, 2016-17 என மூன்று முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். எம்ஜிஆர், வி.என். ஜானகி, ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு அதிமுக சார்பில் முதல்வர் பதவிக்கு வந்த 4வது தலைவர் இவர்தான். நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன் போன்ற ஜாம்பவான் தலைவர்களுக்குக் கூட கிடைக்காத பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.
2017 முதல் 2021 வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதல்வராகப் பணியாற்றினார். அதிமுக ஆட்சிக் காலங்களில் பலமுறை நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார். அரசு நிர்வாகத்தில் அத்துப்படியானவர். பழுத்த அனுபவம் கொண்டவர். அனைவரிடமும் பொறுமையாக, நிதானமாக பழகக் கூடியவர்.
2006-ல் சுமார் இரண்டு வார காலம் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார் ஓ.பி.எஸ். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடைசியாக அவர் போடிநாயக்கனூர் தொகுதியில் உறுப்பினராக இருந்தார். தற்போது அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்துள்ளார்.