இபிஎஸ்.,க்கு எதிராக விரைவில் வீடியோ ஆதாரம் வெளியீடு : செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

Su.tha Arivalagan
Nov 01, 2025,11:49 AM IST

கோபிசெட்டிபாளையம் : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இபிஎஸ்.,க்கு எதிராக விரைவில் வீடியோ, ஆடியோ ஆதாரங்களை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார். இத தொடர்பாக உடனடியாக செங்கோட்டையனிடம் கருத்து கேட்ட போது, இது குறித்து நாளை விளக்கமாக பதிலளிக்கிறேன் என கூறி சென்று விட்டார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.




செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில், நான் கட்சி தலைமைக்கு கெடு விதிக்கவில்லை. பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மட்டுமே தெரிவித்தேன். அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என பழனிச்சாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் பலமுறை பேசி வலியுறுத்தி உள்ளேன். அதிமுக.,விற்கு உண்மையாக உழைத்தவன் நான். தோல்வியே காணாதவர் எம்ஜிஆர். ஒருமுறை தோற்றாலும் மறு முறை வெற்றி பெறக் கூடியவர் ஜெயலலிதா. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிறகும் ஒருமுறை கூட தேர்தல் களத்தில் வெற்றி பெறாதவர் தான் பழனிச்சாமி.


அதிமுக பொதுச் செயலாளராக பழனிச்சாமி பதவியேற்ற பிறகு 2019, 2021, 2024 என வரிசையாக அதிமுக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. பழனிச்சாமியின் போக்கு சர்வாதிகாரத்தனமானது. கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசியதற்காக அடிப்படை உறுப்பினர் தவிர மற்ற அனைத்து கட்சி பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டேன். என்னை திமுக.,வின் பி டீம் என்கிறார்கள். பி டீம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். துரோகம் செய்தது யார்? எல்லாவற்றிற்கும் ஆதாரம் உள்ளது. விரைவில் வீடியோ, ஆடியோ ஆதாரங்களை வெளியிடுவேன். 


அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்பது எனது நோக்கம். எடப்பாடி பழனிச்சாமிக்கு முன் கட்சிக்கு வந்தவன் நான். அதிமுக உடைந்து விடக் கூடாது என்பதற்காக எனக்கு வந்த இரண்டு வாய்ப்புக்களை கூட விட்டுக் கொடுத்தவன் நான். மன வேதனையில் இருக்கிறேன். அதிமுக.,வில் இருந்து என்னை நீக்கியது வேதனையாக உள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.