உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!
- ஸ்வர்ணலட்சுமி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம்தேதி பூமியை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
"உலக சுற்றுச்சூழல் தினம்" கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள்(UN) சபையால் 1974 ஆம் ஆண்டு முதல் 'உலக சுற்றுச்சூழல் தினம்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முக்கியமான நாள்:
மாசுபாட்டை ஒழிப்போம், சுற்றுச்சூழலை காப்போம், பூமியை காப்பாற்றுவோம், உயிரை காப்பாற்றுவோம், மாசு நம்மை அழிக்கும் முன் நாம் அதை அழிப்போம்.
நிலம், நீர், காற்று முதலிய இயற்கை மூலாதாரங்கள் மாசுபாடு அடைவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது. காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வாகனங்களில் இருந்தும் வெளிவரும் புகையும்,கழிவுகளும் காற்றில் கலப்பதால் இயற்கைச் சூழல் ஒவ்வொரு நாளும் சீர் கெட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் கெடுவதால் மனிதகுலம் மட்டுமல்ல விலங்கினங்களும்,தாவர இனங்களும் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்க உலக அளவில் இந்தியாவிலும் பல இயக்கங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. "உலக சுற்றுச்சூழல் தினம்' ஒரு நாள் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டிய நாளாகும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தனது திருக்குறளில் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழல் பற்றிய மிகச் சிறந்த திருக்குறள்கள் எழுதியுள்ளார்.அவற்றில் இயற்கையை மதித்தல் அதாவது மழை வளம் பற்றிய திருக்குறள் இதோ..
"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவுஉம் மழை "
பொருள்:
உண்ணும் உணவையும்,பருகும் நீரையும்,தந்து உயிர்களை வாழ வைக்கும் ஆற்றல் மழையைச் சார்ந்துள்ளது. இயற்கையான மழை சுழற்சியை பாதுகாப்பது சுற்றுச்சூழலின் அடிப்படையாகும் என்பதை விளக்குகிறது இந்த திருக்குறள்.
2026 உலக சுற்றுச்சூழல் தினம் கருப்பொருள்:
"இயற்கையால் ஈர்க்கப்பட்டோம்.பருவ நிலைக்காக நமது எதிர்காலத்திற்காக".(Inspired by Nature. For Climate. For Our Future).
இந்தக் கருப்பொருள் உணர்த்துவது யாதெனில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீர்க்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இயற்கையே மிகச் சிறந்த தீர்வுகளை வழங்குகிறது என்பதாகும்.
இயற்கையால் ஈர்க்கப்பட்டோம் :
காடு,சதுப்பு நிலம், மற்றும் பெருங்கடல் போன்ற இயற்கை அமைப்புகள் கார்பன்-டை-ஆக்சைடு உறிஞ்சி இயற்கையான சமநிலையை பேண உதவுகின்றன. இயற்கை கட்டமைப்புகளை பின்பற்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
பருவ நிலைக்காக ( Climate Action):
தீவிர வானிலை மாற்றங்கள் மற்றும் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உடனடி மற்றும் அவசரமான காலநிலை நடவடிக்கைகளில்(Climate Action )ஈடுபடுவதற்கான அழைப்பு இது.
நமது எதிர்காலத்திற்காக :
தூய்மையான ஆற்றல், நிலையான வாழ்க்கை முறை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற செயல்கள் மட்டுமே பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துகிறது.
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம், இயற்கையை என்றும் நேசிப்போம், பிளாஸ்டிக் இல்லா பூமி செய்வோம், சுற்றுச்சூழலை காக்கும் உறுதி கொள்வோம்!
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.