வாழ்க்கையை வடிவமைக்கும் மதிப்புகள்.. மறக்கக் கூடாத மாண்புகள்!

Feb 06, 2026,03:21 PM IST

- டி. கலைமணி


இன்றைய வேகமான உலகில் மனிதன் பல விஷயங்களைப் பெற்றாலும், வாழ்வை அழகாக்கும் அடிப்படை மதிப்புகளை மெல்ல இழந்து வருகிறான். வாழ்க்கையின் திசையை மாற்றும் சக்தி சில மனப்பாங்குகளுக்கே உண்டு என்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறோம்.


அழிவை தருவது ஆணவம். அது மனிதனை உண்மையிலிருந்து விலக்கி, தன்னைப் பெரிதாக நினைக்கச் செய்து, இறுதியில் வீழ்ச்சிக்கே வழிவகுக்கிறது. அதேபோல் ஆபத்தை தருவது கோபம். ஒரு கண நேர கோபம், நீண்ட காலமாக கட்டியெழுப்பிய உறவுகளையும் மதிப்பையும் சிதைக்கக் கூடியது.


மனிதனிடம் இருக்கவேண்டிய முதன்மை பண்பு பணிவு. பணிவுடன் நடப்பவன் எப்போதும் உயரத்தில் நிற்கிறான். ஆனால் இருக்கக் கூடாத மனநிலை பொறாமை. பிறரின் முன்னேற்றத்தைப் பார்த்து மனம் எரிவதே, நம் சொந்த வளர்ச்சியைத் தடுத்துவிடுகிறது. வாழ்க்கையில் உயர்வுக்கான ஒரே நேர்மையான வழி உழைப்பு; உழைப்புக்கு மாற்றாக எதுவும் இல்லை.




இந்த உலகில் கண்கண்ட தெய்வம் பெற்றோர்கள். அவர்களின் தியாகமும் ஆசீர்வாதமும் தான் நம் வாழ்க்கையின் அடித்தளம். மனிதனாக நாம் செய்ய வேண்டியது உதவி. சிறிய உதவியாவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் எந்த நிலையிலும் செய்யக்கூடாதது துரோகம். நம்பிக்கையை உடைப்பது மனித உறவுகளின் மரணமாகும்.


இன்றைய சமூகத்தில் நம்பக்கூடாத ஒன்று வதந்தி. உண்மை தெரியாமல் பேசப்படும் வார்த்தைகள் பல வாழ்க்கைகளை சீர்குலைத்துள்ளன. அதுபோல் வாழ்க்கையில் நழுவ விடக்கூடாதது வாய்ப்பு. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்தால் மட்டுமே வாழ்க்கை முன்னேறும். நம்முடன் எப்போதும் வருவது புண்ணியம்; அது நம் செயல்களின் பிரதிபலிப்பாகவே நம்மைத் தொடர்ந்து வருகிறது.


பிரியக்கூடாத உறவுகளில் நட்பு முதன்மையானது. சுயநலமற்ற நட்பு வாழ்க்கையின் பலவீனமான தருணங்களில் பெரிய துணையாக நிற்கிறது. மறக்கக் கூடாத ஒன்று நன்றி. நன்றி மறக்கும் சமூகமே மெதுவாக மனிதநேயத்தை இழக்கிறது. மிகமிக நல்ல நாள் இன்று; இன்றைய நாளை பயனுள்ளதாக மாற்றுவது நம் கைகளில்தான் உள்ளது.


இந்த காலகட்டத்தின் மிகப் பெரிய தேவை அன்பு. அன்பு இல்லாத இடத்தில் அமைதியும் இல்லை, உறவுகளும் இல்லை. அதே நேரத்தில் மிகக்கொடிய நோய் பேராசை. அது மனிதனை மனிதனாக இருக்க விடாமல் செய்கிறது. மிகவும் சுலபமானது குற்றம் காணல்; ஆனால் அதைக் கடந்து பார்க்கத் தெரிந்தவர்களே உண்மையில் உயர்கிறார்கள்.


இறுதியாக, வாழ்க்கையின் மிகப்பெரிய வெகுமதி மன்னிப்பு. மன்னிப்பின் மூலம் மனிதன் தன் மனதை விடுவிக்கிறான். இந்த மதிப்புகளை வாழ்வில் கடைப்பிடித்தால், தனிமனிதன் மட்டுமல்ல, சமூகம் முழுவதும் ஆரோக்கியமான பாதையில் பயணிக்கும்.


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி 64 வயதுக்காரர். பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், தன்னம்பிக்கைக் கதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!

news

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி

news

தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

news

Jokes: விசுக்கென்று ஏறி வரும் தங்கம் விலை.. குடும்பத்துக்கே பாதுகாப்பு வேணும் சார்.. !

news

பேச்சைக் குறைங்க.. வாழ்ந்து காட்டுங்க.. Make your life a proof for others!

news

தனித்து நின்றாலும்.. சிங்கமென உறுதியாய்.. Bavely stand alone!

news

அவனின்றி.. ஓரணுவும் அசையாதே.. Without Him, Not Even an Atom Moves

news

எல்லோரும் என்னைப் புறக்கணிப்பார்கள்.. Everyone will ignore my efforts!

அதிகம் பார்க்கும் செய்திகள்