Tamil Poem: இளமையில் வறுமை!

Jun 12, 2026,10:10 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


அறியாத வயசும் அலைபாயும் மனசும் 

புரியாத வாழ்க்கையும் புதிதாக தான் பிறக்கும் 


கண்ணில் வேதனையும் கலையாத சோதனையும்

மண்ணில் பிறந்ததும் மரணிக்கவா என கேட்கும், 


ஒட்டிய வயிறும் 

ஒழிந்த மகிழ்வும் வெந்தணலில் வெந்தே வெளிவரத் துடிக்கும்,


உடைந்த உள்ளமும் 

உருமாறிய உருவமும் உணர்ந்த வலியினை உணர்விலே ஏற்றும்,


மாற்றமும் நோக்கமாக மாறுதல் வேண்டிட 

மானமே போகாதேயென மண்டியிட்டு மடிப்பிச்சைக் கேட்கும்,


சுருங்கிய தேகமும்

சுமைகளைத் தாங்கிட 

சுருட்டிய ஆசைகளும்

வேகமாய் சுகமதைத் தேடும்,




வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்க வழித் தெரியாத மழலைகளுக்கும்

வர்ணனின் கொடையே வலிகளைத் தீர்க்கும்,


பிஞ்சுகளின் கனவுகள் பிச்சை பாத்திரத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் அலைய 

இதயமே

சுக்குநூறாக நொறுங்கும்,


படிப்பின் நோக்கமும் 

பசியும் தாகமுமாகிட

பிடிப்பில்லாமல் பிடரியையும் பிளந்து தாக்கும், 


வாயிக்கும் வயிற்றுக்கும் வன்முறைத் இல்லாமலிருக்க

நோய் வந்தே மேனியே

வாட்டியும் வதைக்கும்,


குழவிகளின் குமுறல்களும் குளவியாய் கொட்ட 

கல்வியும் கரை சேராமல் கலக்கத்தை கொடுக்கும்,


வஞ்சகமற்ற நெஞ்சங்கள் வாழ்க்கையையே வெறுக்க 

சுயநலமற்றே பூமியும் சுடுகாடாய் மாறும்,


குழந்தைகளின் ஏக்கங்களும் குருதியில் உறைய

அவலங்களும் ஆர்ப்பரித்தே ஆழியாய்த் துடிக்கும்,


ஓயாத எண்ணங்களும் ஓய்வில்லாமல் ஓட 

தொய்வில்லாமல் கவலைகளும் தொடரிசையாய்த் தொடரும், 


வாடிப்போன வாழ்க்கையும் 

வாடாமல் தவிக்க 

சாடிப்போன பஞ்சமும் 

குறையாதோயென நெஞ்சம் ஏங்கும்,


தலை விரித்தாடும் வறுமையும் 

தரணியிலே திரிய 

தரங்கெட்ட செயல்களும் மதிகெட்டே முன்னேறும், 


காலத்திற்கும் அழியாமல் 

கால்பங்கேனும் மக்களை வாட்ட 

ஏழ்மையும் கன்னி வெடியாய் காலைச் சுற்றும்,


வாழ்க்கையைத் தொடங்கு முன்னரே வாழ்வது எப்படியென சிந்திக்க

வையகமும் எள்ளி  நகைக்கும்,


இயலாமையும் இல்லாமையும் 

இறுக்கிப் பிடிக்க 

உருகியே நாடி நரம்பும் தளர்ந்துப் போகும், 


பிரியாத பிணிகளும் பிரிந்தே செல்ல 

தளராத தன்னம்பிக்கையுடன் 

போராடி உலகத்தை வெல்வோம்......

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்