மார்கழி திருவெம்பாவை பாசுரம் 05 - மாலறியா நான்முகனும் காணா மலையினை

Dec 21, 2023,08:43 AM IST
உலக மக்களை அறியாமையில் இருந்து விடுவித்து, இறைவனின் வழியில் நடக்க வைக்க வேண்டும் என்பதற்காக மாணிக்க வாசகர் எழுதிய முத்தான பாடல்களே திருவெம்பாவை ஆகும். வழிபாட்டிற்கு உகந்த மார்கழி மாதத்தில் மாதத்தில் திருவெம்பாவை பாடல்களை பாடி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இதனால் மனம் தெளிவடையும்.




திருவெம்பாவை பாசுரம் 05 :


மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்

போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)

ஓலமிடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.


பொருள் : 


திருமாலாலும் பிரம்மாவாலும் கூட சிவனின் அடிமுடியை காண முடியாமல்  திரும்பி வந்தனர். அவர்களுக்கு மலை மீது ஜோதி வடிவமாக காட்சி தந்தவர் நம்முடைய இறைவன். அவரின் அருளை பெற்று விட்டவள் போல் வாயில் தேனும், பாலும் சிந்துவது போல் இனிமையாக பேசக் கூடிய பெண்ணே உன்னடைய வீட்டின் கதவை திற. இந்த உலகத்தில் உள்ளவர்களும், வான் உலகில் உள்ளவர்களும் அவரை அணுக முடியாத போது, அவரை பற்றி நாம் அறிவோம் என சாதாரணமாக பேசுகிறாய். அவரை எவராலும் அறிய முடியாது. அவரின் அருளை பெறுவதற்காக அனைவரும் சிவனே சிவனே என்று ஓலமிட்டு கத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதை உணராமல் நீ உன்னுடைய கூந்தலுக்கு நறுமண திரவியங்களை தடவி அழகு செய்து கொண்டுள்ளதில் இருந்தே நீ எந்த அளவிற்கு சிவன் மீது பக்தி கொண்டுள்ளாய் என்பது தெரிகிறது.


விளக்கம் :


வெறும் வாயால் சொல்லிக் கொண்டிருந்தால் இறைவனின் அருளை எவராலும் பெற்று முடியாது. நாம் தான் இறைவன் மீது அதிக பக்தியாக இருக்கிறோம் என நாம் தான் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனின் அருளை பெறுவது அத்தனை சுலபமல்ல. இறைவனை உணர வேண்டும் என்றால் உடலின் மீதான பற்றையும், இந்த உலகத்தின் மீதான பற்றையும் விட வேண்டும். இறைவனே அனைத்தும் என அவனை முழுவதுமாக சரணடைய வேண்டும். தினமும் கோவிலுக்கு சென்றாலும் கூட கவனத்தை வேறு எங்கோ வைத்திருப்பதற்கு பெயர் பக்தி அல்ல. மனம் இறைவனிடம் எப்போதும் முழுவதுமாக ஒன்றி இருக்க வேண்டும் என விளக்குகிறார் மாணிக்கவாசகர்.

அதிகம் பார்க்கும் செய்திகள்