கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மட்டுமே பொறுப்பாளர் அல்ல. மாநில அரசு, காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் எல்லோருமேதான் கூட்டுப் பொறுப்பு என்று முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அண்ணாமலை அளித்த ஒரு பேட்டியின்போது கூறுகையில், கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்கு மாநில அரசு, உள்ளூர் நிர்வாகம், மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருமே பொறுப்பு. இந்தச் சம்பவத்துக்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். உள்ளூர் நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இந்த உண்மைகளிலிருந்து தப்பிக்க முடியாது.
இந்த வழக்கில் நடிகர் விஜய் முதன்மைக் குற்றவாளியாக இருக்கக்கூடாது. அவரை முதல் குற்றவாளியாக்க முடியும் என்பதை நான் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அது நடக்காது.
மாநில அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்தை விட, சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீதே அதிக நம்பிக்கை இருக்கிறது. இந்த சம்பவத்தை அரசியல் ரீதியான பழிவாங்கும் செயலாக மாற்றக் கூடாது என்றார் அண்ணாமலை.