சிந்தனைச் சிதறல்.. இன்று உங்களை வாசிக்கும் உறவுகள்.. நாளை படைப்புகளை சுவாசிக்கும்!

Apr 03, 2026,01:07 PM IST

- அ.தாமஸ்


நாம் ஒவ்வொரு நாளும் மாலையில் இறக்கிறோம், காலையில் பிறக்கிறோம். நம் பிறப்பையும் இறப்பையும் யாராலும்  தீர்மானிக்க முடியாது தானே. இருந்தும் ஒவ்வொரு நாள் காலையிலும் எழுவோமா என்று தெரியாமலேயே தான் இரவினில் உறக்கம் என்ற நிலையில் இறக்கத் துணிகிறோம்.எனவே ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாய்க் கருதியே இயன்றவரை நல்உறவுகளை நேசிப்போம் அவர்களோடு இணைந்தே சுவாசிப்போம்.


இருக்கும் நம்மை இறந்த பின்னும் நினைக்கச் செய்வதே நம் சிந்தனையும் செயலும். எனவே உதவி வேண்டுவோருக்கு இயன்றதை உதவி உறவு வேண்டுவோருக்கு உரியதை வழங்குவோம்.


நம் உறவுகளுக்கு ஒவ்வொரு நாளும் தனித்துவமாய் வாழும் தகுதியையும், உரிய நேரத்தில் உதவி தேடும் நுட்பத்தையும் கற்றுக் கொடுப்போம். நாம் இல்லாத நாளில் நாம் கற்றுக் கொடுத்தவை தான் அவர்களைத் தனித்துவமாய் வாழத் தகுதிப்படுத்தும்.




அவர்கள் தவறி விடுவார்களோ என்று கருதி ஒவ்வொரு நாளும் நாம் தாங்கிப் பிடிக்கிறோம். இருக்கும் வரை பிடிப்போம் இறப்பு நாளில்.... சிந்திப்போம் இனியாவது அவர்கள் சுயமாய் வாழும் நுட்பம் கற்பிக்க. 


இருக்கும் வரை படியுங்கள் புதியன பல படையுங்கள். இன்று உங்களை வாசிக்கும் உறவுகள் நாளை உங்களின் படைப்புகளை வாசித்து உங்களை நேசித்து உங்களின் நினைவுகளோடு சுவாசிக்கட்டும்.


காலம் கரையும் பொழுது நாமும் அதோடு கலந்து தான் ஆக வேண்டும். எனவே கலந்திடும் காலத்தில் நமக்காகக் கரைந்திடும் கண்களை என் நிலையிலும் தன்னிலைப் படுத்த மறவாதீர்கள். உறவுகளை சம்பாதிப்பதை விட அவர்கள் எத்தகையவர்கள் என்பதைத் தீர்மானிப்பதில் உறுதியாய் இருங்கள். ஏனெனில் நம் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் உறவுகளே உயர்வானவர்கள்.


நாம் இறந்த பின் எத்தனை பேர் நம் இழப்பை உண்மையாய் உணர்கிறார்களோ அதைப் பொறுத்தே நமது இன்றைய இருத்தல் தகுதியானதாக அடையாளப்படுத்தப்படுகிறது. எனவே இருக்கும் வரை உறவுகளை நினைப்போம் நாம் இறந்தாலும் அவர்களின் நினைவினில் நிலைப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்