சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

Jul 04, 2026,04:35 PM IST

சென்னை: தமிழகத்தையே உலுக்கிய குட்கா முறைகேடு வழக்கில், அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களுக்குள் (3 மாதங்கள்) விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை சட்டவிரோதமாக உற்பத்தி செய்யவும், தடையின்றி விற்பனை செய்யவும் அப்போதைய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.


கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு முக்கிய டைரி கைப்பற்றப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்குப் பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான விவரங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.




இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு, சிபிஐ அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராகச் சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.


நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை இனிமேலும் தாமதப்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கைச் சென்னை சிறப்பு நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் முழுமையாக விசாரித்து முடிக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் உரிய சாட்சிகளை விசாரித்து, சட்டப்படியான இறுதி தீர்ப்பை வழங்க தேவையான நடவடிக்கைகளை விசாரணை நீதிமன்றம் எடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சி.விஜயபாஸ்கர் சமீபத்தில் தான் தனது அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக.,வில் சென்று இணைந்துள்ளார். தன் மீதான வழக்கில் இருந்து தப்பிக்கத் தான் அவர் தவெக.,வில் சென்று இணைந்துள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். சி.விஜயபாஸ்கர் தவெக.,வில் இணைந்து ஓரிரு நாட்களிலேயே அவர் மீதான குட்கா வழக்கை விரைந்து முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

news

Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!

news

அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்

news

"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்

news

21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்