தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி.. தமிழினத்தையே பாஜக அவமதித்துள்ளது.. அதிமுக

Jun 03, 2024,06:11 PM IST

சென்னை: ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌..எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது? என்று அதிமுக கேட்டுள்ளது.


ஒடிஷாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிழல் போல இருப்பவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன். அவர் மூலமாக பல சாதனைகளை  நவீன் பட்நாயக் நிகழ்த்தியுள்ளார். நவீன் பட்நாயக்குடன் நீண்ட காலமாக ஒரு அதிகாரியாக, உதவியாளராக பயணித்து வந்த பாண்டியன் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, நவீன் பட்நாயக் கட்சியில் இணைந்து முக்கியத் தலைவராக உயர்ந்துள்ளார். அடுத்து அவர் முதல்வர் பதவியையும் வகிக்கக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.




இந்த நிலையில் அங்கு நடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாண்டியனை வைத்து பாஜக பல்வேறு பிரச்சாரம் மேற்கொண்டது. ஒரு தமிழன் ஒடிஷாவை  ஆள்வதா என்ற கேள்வியை உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுப்பினார். பூரி ஜெகன்னாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறை சாவியை தமிழ்நாட்டுக்குக் கொண்டு போய் விட்டனர் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இவை பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.


இதற்கெல்லாம் உச்சமாக வி.கே.பாண்டியனை கிண்டலடிப்பது போல பாஜக சார்பில் வெளியிடப்பட்ட பிரச்சார வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வீடியோக்கள் தமிழர்களை மொத்தமாக கிண்டலடிப்பது போல இருப்பதாக பிரச்சினை வெடித்தது. பலரும் இந்த வீடியோக்களை கண்டனம் செய்திருந்தனர். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:


"தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்! அறிந்தவர்கள்! ஒரு தமிழன்‌ ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!


தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.


உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள்! என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை.


ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌..எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?


கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.


ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது. 

மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி

news

ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்

news

மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்

news

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

news

விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

news

திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!

news

எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்