தாயாக, தந்தையாக அரவணைத்தவரை மறந்த ஒரு மகனின் தேடல்

Jun 22, 2026,11:44 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


ஆயிரமாயிரம் செலவு பண்ணுணேன் 

வித விதமாக ஆடை அணிஞ்சேன் 

உருவம் தந்தவரே உம் மகிமை மொத்தமும் கூறலயே,


காடோடு நீ படும் பாடு 

வயலோடு உன் உழைப்பு

ஊரெல்லாம் தினக்கூலி உன்ன பத்தி நினைக்கலையே ,


கந்தையோ கண்டிப்போ அதிகமுன்னு ஒதுங்கி நின்னு கட்டி அணைக்காம விட்டேனோ?


தியாகத்தின் சின்னமே சிந்திய வியர்வையின் விருட்சமே,

பிள்ளைகள சீர்தூக்க ஆயுதம் ஏந்தி தன்னைத்தானே செதுக்கியவரே,


பெற்றதெல்லாம் பார்க்குமுன்னு நீங்க நெனைச்சது இல்ல,

செஞ்சதெல்லாம் ஒரு நாளும் சொல்லிக் காட்டியதுமில்ல,




மழை வெயிலு பார்க்காம களைப்பா உழைக்கயில செவப்பான உதிரமும் உறஞ்சிப் போகுமே,


வளர்தெடுத்து ஆளாக்க 

எத்தன எத்தனை சோதனைகள தாங்கிருப்பீங்க,


கல் உடைத்தவரோ கைரேகை தேய்ந்தவரோ 

கழனி உழுது தோய்ந்த உழவர் நீரோ கண்டதெல்லாம் உவர் நீரோ???


இதெல்லாம் பெரிதும் நினைக்காம உங்களை புறந்தள்ளி ஒதுங்கி நின்ற என்னை நினைச்சா புழுங்கி அழுதிட கூட தகுதி இல்லன்னு மனங்கூறும், 


வித விதமா உடுப்புடுத்தி 

அதற்கேற்ற சப்பாத்தும் போட்டு 

சாந்து பொட்டு கன்னத்தில் இட்டு கலைந்த முடியை தென்னை மரமாக்கி

உச்சி கொண்டை போட்டு ஊர் சுத்த தூக்கி தோளில் வைப்பாயே.....

அதை நினைத்தால் இன்னும் விமானம் நினைவுக்கு வருதப்பா, 


குச்சிமிட்டாய் வாங்கிக் கொடுத்து...

சூப்பியதை நான் தின்ன

குறுநகையோட நீ ஊர சுத்தி நடக்கையிலே 

ஊத்தும் எச்சிலில் தலையும் நனைந்துப் போகுமே...


சிந்தித்து நடந்தாலும் சிரிச்சுக்கிட்டே நடந்தாலும் எண்ணங்கள் என்னவோ குடும்பத்து மேல தான் கண்ணாயிருக்கும்....

முதுகு மேல குதிரையும் கண்ணுறங்க கதையும் கதகதப்பா இருக்கும்.....


வாட்டமான குடும்ப நிலையிலும் மேல் படிப்பு படிக்க வச்சீங்க நீங்களும்...


குடும்பத்தோட இருந்த நிலையில பிரியத் தோணலையே 

பிரிந்து போய் படித்த பிறகு மீண்டும் வந்து குடும்பத்தோடசேர தோணலையே...


பதவி பட்டமுன்னு ஒசந்து நிக்கையில உங்களையும் அறிமுகப்படுத்த மறந்தேனே...

ஓலக் குடிசையும் ஒட்டிய வயிறுந்தான் நான் ஒசர காரணங்கிறத நெனைக்கலையே...


கல்யாணந்தான் பண்ணிக்கிட்டேன் காசு பணத்தை பார்த்து என் பிள்ளையும் பிறந்தான் உங்க சாயல உதிர்த்து....


தகப்பனாகிய போதுதான் தேடுகிறேன் அப்பா எனும் உருவத்தை நினைத்து எப்படி மறந்தேன் உங்களை வெறுத்து...


வரமாக வந்த கடவுளை இன்று தெருவோரமாக தேடிக் கொண்டிருக்கின்றேன் மீண்டும் கிடைக்காதா

எனக்கு உயிர் தந்த உதிரமென்று!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்