தந்தை எனும் ரத்தினம்

Jun 22, 2026,11:40 AM IST

- பா.பானுமதி


தவிக்கும் போது தலைக்கோதினாய் 

தடுமாறும் போது தாங்கி கொண்டாய் 


தடம் மாறும்போது தன்னம்பிக்கை ஊட்டினாய்

வறுமையிலும் வளம் கூட்டினாய்


திறமைகளை கூர் தீட்டினாய் 

உலகை உள்ளங்கையில் வைத்துக் காட்டினாய் 


உறவுகளை எனக்காக தட்டி தூக்கினாய் 

கல்வி எனும் ஆயுதத்தால் களைகளை வெட்டி வீழ்த்தினாய் 


தன்னம்பிக்கை விதை விதைத்து தரணியை அறிமுகம் செய்தாய் 

காயங்களை எல்லாம் மாயம் என மறைத்து வைத்தாய் 




சாயம் போன உடைகள் அணிந்து சரித்திரம் சொன்னாய்

தயமாய் உருட்டும் காலத்தை தனியாய் எழுதினாய்


கோப பார்வையால் கொண்டாடினாய் 

சினேகப் போர்வையில் பண்பாடினாய்


முடியாத போதும் முடுக்கி விட்டாய் 

படியாவிட்டால் படிக்க வைத்தாய் 


கடமைகள் முடிந்ததும் காலமானாய்

உடைமைகளைத் தந்து உயர்ந்து போனாய் 


நெஞ்சில் நின்றாடும் ரத்தினம் நீ

நீ இன்றி நெஞ்சில் இன்று நடமாடும் தீ


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்