வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளார். இது பெரும் பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்காவில் இனி இரண்டு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது, பாரீஸ் காலச் சூழல் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, மெக்சிகோ ஊடுறுவலுக்கு முற்றுப்புள்ளி என்று அவர் பல்வேறு அதிரடியான முடிவுகளை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் 45வது அதிபராகவும் இருந்தவர் டிரம்ப். 2வது முறையாக அதிபராகியுள்ள டிரம்ப் எடுத்த எடுப்பிலேயே அதிரடியைக் காட்டத் தொடங்கியுள்ளார். பதவிக்காலம் முழுவதும் அனல் பறக்கும் என்பதை தனது முதல் பேச்சிலேயே வெளிப்படுத்தியிருந்தார் டிரம்ப். அதைத் தொடர்ந்து அவர் பல்வேறு முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அத்தனையும் படு சூடானவை.
முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 80 உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை முந்தைய ஜோ பிடன் ஆட்சியில் நடைமுறையில் இருந்த உத்தரவுகளை மாற்றும் உத்தரவுகளாகும். டொனால்ட் டிரம்ப்பின் முதல் நாள் முடிவுகளை ஹைலைட்ஸ்களாக பார்ப்போம்.

- மெக்சிகோ நாட்டுடனான தென் எல்லையில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊடுறுவல்காரர்கள் தடுக்கப்படுவார்கள். அனைத்து சட்டவிரோத ஊடுறுவல்களும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும். அமெரிக்காவுக்குள் ஊடுறுவி பதுங்கியிருக்கும் லட்சக்கணக்கான கிரிமினல்களும் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் நிறுத்தப்படுவார்கள்.
- 2021 பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா உடனடியாக விலகுகிறது (தனது கடந்த ஆட்சியின்போதும் கூட இதே முடிவை எடுத்திருந்தார் டிரம்ப். பின்னர் வந்த பிடன் அரசு பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது என்பது நினைவிருக்கலாம்)
- உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உடனடியாக விலகுகிறது (கடந்த டிரம்ப் ஆட்சியின் கடைசிக்காலத்தின்போதும் இதே போல விலகியிருந்தது அமெரிக்கா. கொரோனா பேரிடர் சமயத்தில் அமெரிக்காவுக்கு ஹூ சரியான உதவிகளைச் செய்யவில்லை என்று அப்போது டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். ஹு அமைப்புக்கு அதிக அளவில் நிதி அளிப்பது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது)
- படிம எரிபொருள் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பெடரல் ஊழியர்களுக்கு (அரசு ஊழியர்கள்) வழங்கப்பட்டு வந்த ஒர்க் பிரம் ஹோம் சலுகை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பேச்சு சுதந்திரம் மீண்டும் அமலாக்கப்படும். இணைய வெளிகளில் அரசு நடைமுறைப்படுத்தி வந்த சென்சார் முறை ரத்து செய்யப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில் பேச்சு, கருத்து சுதந்திரத்தை பிடன் அரசு நசுக்கி விட்டது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
- மெக்சிகோ வளைகுடாவின் பெயர் இனி அமெரிக்க வளைகுடா என மாற்றப்படும்.
- அமெரிக்காவில் இனி ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்படும்.
- 2021 ஜனவரி 6ம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையின் கேபிடல் வளாகத்தில் நடந்த கலவரத்தின்போது கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 1500 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. (ஜோ பிடன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கேபிடலில் டிரம்ப் ஆதரவாளர்கள் வரலாறு காணாத கலவரத்தில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டுக் கைதானவர்கள்தான் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
டிரம்ப் அறிவித்துள்ள இந்த முக்கிய முடிவுகள் அமெரிக்காவில் சூடான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இனி அடுத்தடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளில் டிரம்ப் ஈடுபடுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
M Bharathi Poem: காற்று
When Care Turns Blind.. அன்போடு சுட்டிக் காட்டப்படும் தவறுகள்.. நல்லதே!
Deepa Ravi Poem: நீலவானும் நீயும் நானும்
குடைக்குள் மழை
Amarnath Yathra.. எனது கண்ணோட்டத்தில் அமர்நாத் யாத்திரை.. ஒரு பயணக் கட்டுரை (1)
Monday Motivational Poem: தொலைந்து போக ஆசை!
{{comments.comment}}