தோல்வியில் துவளேல்!

Apr 18, 2026,05:03 PM IST

- முனைவர் கோ. லதா


தோல்வி கண்டு துவளல் வேண்டா!

ஊக்கம் கொண்டு உயர்வாய் நீயே!

வீழ்வது என்பது வீழ்ச்சி அன்று,

எழுவது தானே வெற்றியின் பாதை!


விதியெனச்சொல்லி விலகிப் போகாதே,

மதியினைப் பயன்படுத்தி மாண்பினைப்  பெறுவாய்!

இடர்பாடு வந்தாலும் இடிந்து விடாதே,

கடலலை போலக் கரையை நீமுட்டு!


இருளைக் கண்டு இளகிட வேண்டா,

கதிரவன் வருவான் கவலை வேண்டாம்!

உழைப்பை மூலதனமாய் உன்னிடத்தில் வைப்பாய்,

பிழைப்பின் ரகசியம் பொறுமையே ஆமே!


முயற்சி என்னும் வித்தினை விதைப்பாய்,

வெற்றி என்னும் கனியினைப் பறிப்பாய்!

நம்பிக்கை ஒன்றுனை நடத்திச் செல்லும், 

நாளைய உலகம் உன்னைப் போற்றும்!




உலகப் பாரம்பரிய தினம்....


உலகப் பாரம்பரியம் போற்றுதல் நன்றே

உயர்ந்த மரபினைக் காப்போம் இன்றே!

கலைநயம் மிக்கதோர் கவின்மிகு கோயில்

காலம் கடந்துமே நிற்குமே வாயில்!


பாறைச் செதுக்கிய சிற்பங்கள் யாவும்

பண்பாடு காத்திடும் சாட்சியாய் ஆகும்!

கல்வெட்டுச் செய்திகள் சொல்லுமே உண்மை

காலம் உரைத்திடும் தமிழரின் மேன்மை!


மண்ணின் புகழினை மன்பதைக் காக்க

விண்ணின் விண்மீனாய் விவேகம் பூக்க!

சிதைத்திடா வண்ணம் சின்னங்கள் காப்போம்

சிந்தையில் தூய்மைப் புகழினை ஏற்போம்!


பழமையின் பெருமை பாங்குடன் உணர 

அழகிய கலைகள் அகிலத்தில் மிளிர!

அகழ்வாராய்ச்சி தரும் அறிவின் விளக்கம்

அகிலமே கொண்டாடும் அறத்தின் துளக்கம்!


தலைமுறை தாண்டியும் தழைத்திட வேண்டும்

தனித்துவப் பெருமை நிலைத்திட வேண்டும்!

மாமல்லப் புரத்தின் மாபெரும் கலைகள்

மாண்பினைச் சொல்லும் மங்காத நிலைகள்!


ஏப்ரல் பதினெட்டு தினமிது போற்ற

எழில்மிகு கலைகளை பாரினில் ஏற்ற!

பாரம்பரியப் பெருமை பாரெங்கும் காப்போம்

பாரினில் தமிழரின் புகழினைச் சேர்ப்போம்!


--


நன்னெறி ஒழுகிடு...


உள்ளம் தூய்மை கொள்ளுதல் வேண்டும்

நல்ல வழியில் செல்லுதல் வேண்டும்

கள்ளம் கபடம் இல்லா வாழ்வே

அள்ள அள்ளக் குறையா இன்பம்!


இன்சொல் பேசி இதயம் வெல்வாய்

புன்சொல் நீக்கிப் புகழ்நீ கொள்வாய்

அன்பே உலகை ஆளும் கருவி 

பண்பே உனது வாழ்வின் துருவி!


கற்ற கல்வியை நெஞ்சில் நிறுத்து

பெற்ற அறிவை உலகிற்குப் பகுத்து

சுற்றம் சூழச் சுகமாய் வாழ்வாய்

கற்றோர் சபையில் உயர்ந்து வீழ்வாய்!


தீய பழக்கம் தீயெனச் சுடும்

தூய ஒழுக்கம் துணையாய் வரும்

வாயால் நன்மொழி நாளும் நவில்வாய்

சேயாய் உலகிற்கு ஒளியைத் தருவாய்!


--


தெளவு உளம் கொளேல்....


தெளவுஉளம் கொளேல் தவிப்பினைத் தரும் 

எவ்வம் சூழவே ஏமாற்றம் மிஞ்சும் 

கவ்வி இருள்சேர் குழப்பமே மிஞ்சும்

செவ்விய வாழ்வைச் சிதைத்தே அளிக்கும்


ஐயம் கொண்டால் அறிவு மயங்கும்

மெய்யைச் சிதைத்தே மேன்மை குறைக்கும்

பொய்யும் புரட்டும் புகலிடம் ஆகும் 

நையும் உள்ளம் நலிந்தே போகும்


துணிவே இன்றித் தள்ளாட வைக்கும் 

பணிவை மறந்தே பாவம் சேர்க்கும் 

கனிவு இல்லாக் கல்மனம் ஆக்கும்

இனிய உறவை இடரிட வைக்கும் 


தெளிந்த உள்ளம் தேவா மிர்தம் 

ஒளிசேர் வாழ்வின் உன்னத கீதம் 

தெளவு நீக்கித் தெளிவினைப் பெறுக

இகமே புகழும் இன்பத்தைச் சேர்க்க


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்