Sunday Special: சாத்தூரில் சுவாரஸ்யம்.. 55 வயதில் குழந்தைகளாக மாறிய முன்னாள் மாணவர்கள்!

Aug 16, 2026,10:14 AM IST

- தியோபால்டு மற்றும் முனைவர் தி. தங்கலட்சுமி


விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள S.H.N. Edward உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள், குறிப்பாக 1962–1968 ஆம் ஆண்டுகளில் ஒன்றாகக் கல்வி கற்ற ஒரு சாலை மாணாக்கத் தோழர்கள் அனைவரும், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் ஒன்றிணைந்து சர்வதேச நண்பர்கள் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.


எங்களின் 55ஆம் அகவையில் மீண்டும் சிறுவர்களாக மாறிய தருணம் மிகவும் நெகிழ்வானது.


நண்பர்களின் பெருமுயற்சியால் வெவ்வேறு ஊர்களிலும், வெவ்வேறு தொழில்களிலும் கூடுவிட்டுப் பறந்து சென்று சிறந்து விளங்கும் அனைத்துத் தோழமைப் பறவைகளையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைத்து, நண்பர்கள் தினத்தில் நட்பின் சிறப்பைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றோம்.


அந்த வகையில், இந்த ஆண்டு 09.08.2026 அன்று நடைபெற்ற 20ஆம் ஆண்டு நண்பர்களின் மகிழ்ச்சியான சந்திப்புக் கூடுகை கூடுதல் சிறப்பாக அமைந்தது.


அகவை எழுபத்தைந்தைத் தொட்டுவிட்ட மூத்த இளைஞர்கள், இப்போதும் இடைவிடாது தொடர்ந்து 20 ஆண்டுகளாக தங்களின் மலரும் நினைவுகளையும் மாறாத நட்பினையும் புதுப்பித்து மகிழும் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தி வருகின்றனர்.


இவர்களின் அன்பும் நட்பும் வள்ளுவன் வடித்த நட்பதிகாரத்தின் சாட்சியாய்த் திகழ்வது இன்றைய தலைமுறைக்குச் சிறந்த உதாரணமாகும்.


நட்புக்கு மூப்பேது? முடிவேது?




அவர்களுக்கான சிறுகவிதை


1962–1968 ஆம் வருடத்து எட்வர்டியன்ஸ் நண்பர்கள் குழாம்


சிறு கூட்டில் சிறகசைத்து

ஒரு கூட்டுப் பறவையாய் வளர்ந்த

சிரிப்பொலியைச் சிதறவிட்டு

சிந்தனையைச் சிறக்கச் செய்த

கீர்த்திமிகு பள்ளித் தோழமைகளே!


பாங்காக அனைவரும் பட்டங்களும்

பதவிகளும் பல பெற்றும் – அதில்

அனுபவ முத்திரைகள் பல பதித்தும்

ஓய்வுக்காலம் வந்ததென காலமும்

ஓரங்கட்டத் துவங்கிய காலத்தில்...


பள்ளி நாட்களில் வைத்த

அதே அன்பை, மாறாத நட்பை,

மனமகிழ்வை மீண்டும் மீட்டெடுத்து

ஆண்டுகள்தோறும் ஆடிப்பாடிக் களிக்க

ஆனந்தமான நண்பர்கள் குழாமின்

இருபதாம் ஆண்டு கூடுகை என்பது

கூடுதல் அகமகிழ்வைத் தரும் தருணமிது!


அகவைகள் கூடக்கூட அகத்தில் சிறு நடுக்கம்;

அன்பான நண்பர்களின் நிரந்தரப் பிரிவுகள்

நெஞ்சத்தில் ஏற்படுத்திய நிரந்தர வடுக்கள்;

அவை தரும் வலிகள் மறக்கச் செய்யும் முயற்சியாய்...


அன்பென்னும் அருமருந்தை ஆண்டுதோறும்

நல்கிடும் நம் நண்பர்கள் கூடுகை

வெள்ளிவிழா ஆண்டினை நோக்கிய பயணமாய் நீண்டிட...

நண்பர்கள் அனைவரின் ஆயுள், ஆரோக்கியமும் நீண்டிட...

ஆண்டவனின் அருள் நிச்சயமாய்த் துணை நிற்கட்டும்!


பால்யகால சிநேகிதத்தின் பாந்தமான நினைவுகளை,

மலரும் நினைவுகளால் மனம் நிறைத்திட்ட

உடலால் மூத்தாலும் உள்ளத்தால் இளமையாய்த் திகழ்ந்திடும்

இனிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய நட்பின் வாழ்த்துகள்!


தொடரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் நம் நட்பின் கூடுகை!


முது இளையவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இத்தருணத்தில் மனமகிழ்வான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கடந்த நூற்றாண்டின் ஆணிவேர்களைக் கொண்ட விருட்சங்களைத் தாங்கிடும் விழுதுகளான அடுத்த தலைமுறையினரின் அன்பான பராமரிப்பும் பாசமான பேணுகையும் இருப்பதாலேயே இத்தனை ஆண்டுகளாக மனமகிழ்வாக நண்பர்கள் சந்திப்பு நிகழ்வைக் கொண்டாடி வருகின்றனர்.


அவர்களின் கொண்டாட்டங்கள் என்றென்றும் தொடரட்டும்! வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களும் சிறக்கட்டும்!


(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழனென்று சொல்லடா தலை‌ நிமிர்ந்து‌ நில்லடா!

news

கடவுள் ஏன் கல்லானார்?

news

Sunday Special: சாத்தூரில் சுவாரஸ்யம்.. 55 வயதில் குழந்தைகளாக மாறிய முன்னாள் மாணவர்கள்!

news

சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???

news

தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!

news

முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்

news

அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

news

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!

news

போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்