International Yoga Day: செய்யும் வழி யோக வழி! உய்யும் உன் தேக வலி!

Jun 21, 2026,11:24 AM IST

- எம்.கே.திருப்பதி


ஆதி சிவனே 

அதன் மூலம் 

அதனிடமிருந்து அதை

பெற்றது பதஞ்சலி எனும் 

பிரவாகம்!


பனிபடர்ந்த இமயத்தில் 

பதஞ்சலி முனி யோகாவை 

ஏழு ரிஷிகளுக்கும்

எடுத்து உரைத்தார் :


உடலும் ஆன்மாவும் 

உருத்தேற

ஒப்பில்லாக் கலையை அந்த   

உத்தமர்கள்

உள்ளத்தில் நிறைத்தார்!




சப்த ரிஷிகள் 

சகமெங்கும் விதைத்தனர்

இந்த

அற்புதக் கலையை :

அதற்கு அவர்கள் தேர்ந்தது 

அதிகாலையை!


புலர்காலைப் போதில் 

மலர்போல் ஒரு 

மணித்துணி விரித்து 

அதன்

மடல்போல் - அதில் நம் 

மானுட உடல் தரித்து 


கையும் காலும்

கீழ் மேல் உயர்த்தி 

மெய்யும் தோளும் 

இடவலம் நகர்த்தி 


பெய்யும் மழைபோல் 

பயிற்சியது பண்ணி 

தொய்யும் உடல் நலம் 

துவசம் போல் பறக்க...


செய்யும் வழி

யோக வழி!

உய்யும் உன் 

தேக வலி!


ஆசனத்தில் 

அதி முக்கியமானது

நான்கு நிலைகள் :

நான்கும்

நான்கு வகைகள்!


நான்காலும் நலப்படும் 

நம் - நசைகள் தசைகள்!


அமராசனம் ஒரு 

அமராசனம்! அதை

சாத்தியப்படுத்தினால் 

சாகா வரம்பெறும் 

சராசரி சனம்!


குப்புறப் படுத்தபடி 

கொண்டாடும் நிலை

அப்புறப்படுத்தும் - மன

அழுக்கை அசடை :  மனித

கருத்துக்கொவ்வாத கசடை!


வடிவுடைலை 

வானம் நோக்கி

வருந்திச் செய்யும் யோகா 

நம்முள் 

நறவத்தைக் கொட்டும்:

வாழ்வும் 

வானத்தை எட்டும்!


நின்று கொண்டு 

நிறையச் செய்யும் 

இறைக்கலை...

வென்று காட்டும்:

வெற்றியை ஈட்டும்!  


போகாசனம்

புரிவோருக்கு

யோகாசனம்

யோகம் தரும் :


தேகநலன் தேடுவோருக்கு

யோக நலன் 

லாபம் தரும்!


மந்தகாசமாய் 

மனநிலை உள்ளோர்க்கு 

மந்திரக்கலை 

அட்டகாசமாய் 

அறிவை ஈனும் :


பாரத நாட்டின்

பழம்பெரும் யோகா

நில முழுதும் நின்று

நல முழுதும் நல்கி

பாரோரை மகிழ்வித்து

பரவசம் காணும்!


இழுத்துவிடும் மூச்சில்

பழுத்து விழும்

பிரதிபலன் :

அதுவே நம் 

பிறவிப் பயன்!


தேக ஆரோக்கியம்

தெளிவு பெற

உள்ள ஆரோக்கியம்

உறுதி பெற...


அன்றாடம் 

அதிகாலை அதிகாலை

யோகம் பயில்வோம்:


யோகா என்னும் 

யாகம் பயில்வோம்!


யோக ஆசனம்

மூளையைக் கூர்மையாக்கும்

அறிவுத் தொழிற்சாலை!


உளவயலின் உறுபொருள்!

உடல்வயலை சமப்படுத்தும் 

பரம்புப் பாய்ச்சல்!


ஆன்மாவை 

சித்த சுத்தியாக்கும்

சினைப் பொருள்!

மனதைத் திறக்கும்

மந்திரச்சாவி!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்