அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

Mar 13, 2026,12:07 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முகங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்தவரான காளியம்மாள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.


நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தபடியாக சிறந்த மேடைப் பேச்சாளராக அறியப்பட்ட காளியம்மாள், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.


அவர் விலகிய பின், திமுக அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என பல்வேறு யூகங்கள் பரவின. ஆனால், அவர் அந்த செய்திகளை மறுத்து வந்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




2019 மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியிலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர் காளியம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.


நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமான முகமாகவும், அக்கட்சியின் பெண் ஆளுமையாகவும் விளங்கிய காளியம்மாள், தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இது ஒரு சாதாரண கட்சித் தாவலாக மட்டுமின்றி, ஒரு முக்கிய அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.


அதிமுகவில் தற்போது ஜெயலலிதா காலத்தைப் போல ஆக்ரோஷமாகவும், தர்க்கரீதியாகவும் பேசக்கூடிய பெண் ஆளுமைகளுக்கு ஒரு வெற்றிடம் நிலவுகிறது. காளியம்மாளின் தனித்துவமான மேடைப் பேச்சு மற்றும் எளிய மக்களுடன் உரையாடும் விதம் அதிமுகவின் பிரசாரக் களத்திற்குப் பெரிய பலத்தை சேர்க்கும். அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான பெண் வாக்காளர்களைக் கவர இவருடைய வருகை ஒரு கருவியாக அமையும்.


சீமானுக்கு அடுத்தபடியாக அக்கட்சியில் அதிகம் அறியப்பட்டவர் காளியம்மாள். 2019 மற்றும் 2021 தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தந்த ஒரு மூத்த நிர்வாகி வெளியேறியது, நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியது. காளியம்மாளுக்கு எனத் தனிப்பட்ட முறையில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் அவர் சார்ந்த சமூக வாக்குகளில் ஒரு பகுதி அதிமுக பக்கம் நகர வாய்ப்புள்ளது. இது நாம் தமிழர் கட்சிக்கு கண்டிப்பாக இழப்பாக அமையும்.


காளியம்மாள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், டெல்டா பகுதிகளில் அதிமுகவின் செல்வாக்கை உயர்த்த அவர் பயன்படுத்தப்படுவார். ஏற்கனவே பூம்புகார் மற்றும் வடசென்னையில் களம் கண்ட அனுபவம் இவருக்கு இருப்பதால், வருகிற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு முக்கிய தொகுதியில் இவர் நிறுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்களைக் குறிவைக்கும் நிலையில், காளியம்மாள் போன்ற ஒரு பேச்சாளரை அதிமுக தன் பக்கம் இழுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவுக்கு நல்ல பேச்சாளர் கிடைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அரசியலில் 'யார் எப்போது எங்கு இணைவார்கள்' என்பது ஆச்சரியமல்ல என்றாலும், கொள்கை ரீதியாகத் தீவிரமாகச் செயல்பட்ட காளியம்மாளின் இந்த மாற்றம் அதிமுகவிற்கு ஒரு புதிய ஆற்றலைத் தந்துள்ளது. 2026 தேர்தலில் அதிமுகவின் 'நட்சத்திரப் பேச்சாளர்' வரிசையில் இவருக்கு மிக முக்கிய இடம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்