பணத்தை வென்ற பாசம்!

Jul 25, 2026,02:11 PM IST

- வி.பி.ஸ்ரீநிவாசன்


ராமசாமி பட்டா மாற்றல் விஷயமாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து தாசில்தாரை சந்தித்தார். தாசில்தார் ஒரு பெண்.


பட்டா மாற்ற 10,000 ரூபாய்  லஞ்சம் தரவேண்டும் என்றார்.


ராமசாமி ஒரு நிமிடம் சிந்தித்தார்.


பிறகு அவரிடம் சரிமா தருகிறேன். நீங்கள்  ஏதோ ஒரு கஷ்டத்தில் இருக்கிறீர்கள்  போலிருக்கிறது. அதனால்தான் கேட்கிறீர்கள்.  ஆனால் ஒன்று. லஞ்சமாக தரமாட்டேன். சீதனமாக தருவேன் என்றார்.


அதற்கு தாசில்தார், சீதனமாகவா, புரியவில்லையே. விவரமாக சொல்லுங்கள் என்றார்.


உடனே ராமசாமி என் வயது 55. நிச்சயம் நீங்கள்  என்னை விட இளையவராக இருப்பீர்கள் இல்லையா? என்று கேட்டார்.


அவரும் ஆமாம் என்றார்.


ராமசாமி கூறினார்.




உங்களை நான் என் தங்கையாக கருதிவிட்டேன். ஒரு அண்ணனின் கடமை தங்கையின் கஷ்டத்தை போக்க வேண்டியது. அதனால்தான் உங்களுக்கு லஞ்சமாக தராமல் சீதனமாக தருகிறேன். இப்பொழுது மட்டுமல்ல. எப்பொழுது வேண்டுமானாலும் என்னிடம்  உதவியை  தயங்காமல் கேளுங்கள். இனி நீங்கள் என் குடும்பத்தில் ஒருவர் என்றார்.


தாசில்தார் அவரை ஒரு நிமிடம் பார்த்தார். உடனே அவரது கண்களில் கண்ணீர் தளும்பியது. 


அதைப் பார்த்த ராமசாமி  ஏன்  அழுகிறீர்கள்? என்று கேட்டார்.


அவர் எழுந்து நின்று கை கூப்பியவாறு ஐயா, இல்லையில்லை. அண்ணா. எனக்கு கூடப்பிறந்த அண்ணன் தம்பி யாருமில்லை. நீங்கள் என்னை உங்கள் தங்கை என்று சொன்னதும் அப்படியே ஆடிப்போய் விட்டேன். இதுவரை யாரும் என்னை தங்கையாக பாவித்ததில்லை. நீங்கள் என்னை  தங்கையாகக் கருதியதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குடும்பத்தில் ரொம்ப கஷ்டம். அதனால்தான் லஞ்சம் கேட்டேன். ஆனால் உத்தமரான உங்களிடம் கேட்டது எவ்வளவு பெரிய தவறு என புரிந்து கொண்டு விட்டேன். இனி யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன் என அந்த தாசில்தார் தெரிவித்தார். 


(வி.பி.சீனிவாசன், அம்பத்தூர், ஒய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்