சென்னை: தமிழ்நாட்டில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டி அசத்தியுள்ளது. 5 லட்சம் மாணவர்களை சேர்க்கும் இலக்குடன் அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
கல்வியில் தமிழ்நாடு எப்போதுமே பெஸ்ட் மற்றும் லீடிங் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகள் எல்லாம் இப்போது வேற லெவல் வளர்ச்சியில் உள்ளன. இங்கு இல்லாத வசதிகளே கிடையாது.. மேலும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி ஒருவர் கூட கல்வி கற்காமல் விடுபட்டு விடக் கூடாது என்ற வேகத்தில் செயல்பட்டு வருகிறது.
மாணவர்களுக்காக மணி மணியான திட்டங்கள்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது என்பதை விட பெற்றோர்களுக்குப் பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ள திட்டமாக பார்க்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் பசியின்றி கல்வி கற்க ஏதுவாக ஊட்டச்சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது.
மதிய உணவுத் திட்டத்தின் மகத்துவம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததுதான்.
புதுமைப் பெண் திட்டம் - அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தற்போது தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இன்னொரு முக்கியத் திட்டமாக நான் முதல்வன் திட்டம் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வேலைவாய்ப்புத் தகவல்களைப் பெறவும் வழிகாட்டுகிறது.
படிக்க வந்தா மட்டும் போதும்!

இதை விட முக்கியமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குப் பின்வரும் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன:
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் - சீருடைகள். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள், 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி. இதுதவிர, மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை, காலணிகள் உள்ளிட்டவையும் இலவசமாக தரப்படுகிறது.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மாதந்தோறும் ரூ. 1,500 ஊக்கத்தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ள ஒரு முக்கியத் திட்டமாகும்.
இதுதவிர ஆங்கில மொழியில் திறனை வளர்த்துக் கொள்ள ஆங்கில லேப் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் தற்போது அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ளன. வெறுமனே மதிப்பெண்களை மட்டுமே குறி வைக்காமல் மாணவர்களின் அனைத்து விதமான திறன்களையும் ஊக்கப்படுத்தி, அதை பலப்படுத்தி, சிறந்த குடிமக்களாக அவர்களை மாற்றும் மிகப் பெரிய சேவையை தமிழ்நாடு அரசும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் செய்கிறார்கள். இதனால் சமீப காலமாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
விறுவிறுப்பான மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மாநிலம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதியதாகப் பள்ளிகளில் இணைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 711 மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துத் தங்களது சேர்க்கையை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொத்த சேர்க்கையில் முதலாம் வகுப்பில் மட்டும் சுமார் 97,737 மாணவர்கள் இணைந்துள்ளனர். அதேபோல் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலை வகுப்புகளில் 8,178 மாணவர்களும், மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி பிரிவுகளில் 6,796 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாலும், பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
இதுவரை 1 லட்சம்.. இலக்கு 5 லட்சம்

நடப்பு ஆண்டில் மொத்தம் ஐந்து லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பதைப் பள்ளிக்கல்வித் துறை இலக்காகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சுமார் 4.30 லட்சமாக இருந்த நிலையில், இந்த முறை இலக்கை உயர்த்தித் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் மாதத்திலேயே, அதாவது மார்ச் 1ம் தேதியிலிருந்தே ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளின் விவரங்களை அங்கன்வாடிகள் மூலம் சேகரித்து, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் முழுமையாக அகலாத நிலை இருப்பதால், தற்போது களப்பணிகள் மற்றும் வீடு வீடாகச் சென்று மாணவர்களைச் சேர்க்கும் பணிகள் சற்று மெதுவாக நடைபெற்றாலும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மாணவர் சேர்க்கை வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) சேர விரும்புவோருக்கு மே 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், வரும் வாரங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பல மடங்காக உயர வாய்ப்புள்ளது.
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
{{comments.comment}}