அன்னை ஓர் அற்புதம்!

May 10, 2026,04:08 PM IST
- எம். கே. திருப்பதி

பேறுகாலப் பெருஞ்சிறப்பின்
பெரிதினும் பெரிது கேள்!
அன்னை என்னும் 
அரிதினும் அரிது கேள்!
 
பிறந்தகம் நீங்கி  
பெருவரம் வாங்கி 
புகுந்தனள் அவளும் 
புக்கக இல்லம்!

புத்தகம் வந்து 
புத்தகம் போலே 
புதியவள் தன்னை 
பத்தி பத்தியாய் 
படிக்கத் தந்து...

வித்தகம் விளையும் 
வித்துப் பையில் 
முத்துப் போலொரு 
முதல் மகவு 

பத்துத் திங்களில் 
சொத்தென வரும்!
சுகமதைத் தரும்!

வலக்கரம் பற்றியர் 
வாழ்விடத்து பெரியோர் 
பெற்றவர் மற்றவர் 
உற்றவர் உறவென...

குலக்கொழுந்து தூக்கி 
குதி போட்டு நிற்கும்!



மேல் கொண்ட மேலோடு 
மால்கொண்ட மணாளன் 
கால் கொண்டு தரையில் 
கணநொடி இல்லை!

கால் என்னும் காற்றில்
நூல் கொண்ட பட்டம் 
நால் திசை பறக்கும்: அது 
போல் -- ஆனான் அவனும்!

பேறின் பெருவலி 
பிறவோர் அறியார்
மார்பில் வாள் வாங்கும் 
மறவோரும் அறியார்!

உடலுறை எச்சம் 
ஊனுறை என்றாகி 
தாயும் தகவும் 
தம்முள் ஒன்றாகி...

உயிர் பிணைப்பின் 
உதவியில் உண்டாகும்
உதிரப் பொட்டு!
உயிர்ச் சங்கிலியால் 
உந்தப்பட்டு!

உண்டாகி இருப்பவளை 
உபத்திரவப்படுத்தும்
மாளா மசக்கை!

வைக்கும் உணவு  
வயிற்றில் விழும் 
வயிற்றில் விழுந்தது -  மீண்டும்
வாய்வழி வரும்!

பெற்பவள் ஊட்டமே
பிள்ளையின் ஊட்டம் 
பிள்ளையிங்கு பிறங்கும் 
பிரளயகாலத்துப் பெருமானாட்டம்!

சூல்கொள் பொழுதுகள் 
தலைகீழ் விகிதங்கள்!

தேனது கசக்கும் 
மாவடு இனிக்கும்!
இருக்கும் இப்படி!
தடுமாறி நடப்பாள் 
தப்படிக்குத் தப்படி!

ஆம்பலும் இங்கே
சாம்பலை விரும்பும்!
சோம்பலும் இங்கே 
சுள்ளன விரியும்!

இருபக்க இடுப்பு வலி
இடையின்றி நீளும்!
உப்பு நீரின் உள்வலி 
உயிர்வரை பரவும்!

அனைத்தும் தாண்டி
அனர்த்தம் தாண்டி 
தன் மடியில்
தழைக்க வைக்கிறாள்
தலைமுறைத் தரு...
அந்தத் திரு!

அதற்கு
நீரும் அவள்தான்!  ஆணி 
வேரும் அவள்தான்!

அவள்
காட்டிய அன்பின்
கதைகள் இங்கு 
கனவுகள் அல்ல!
அவள்
ஊட்டிய சோற்றின்
ஒவ்வொரு பருக்கையும்
விதையாய் எழும் மெல்ல!  

வாழ்த்தி வணங்குகிறேன் 
நாற்ற நாரியை!
மழைபோல் சுரக்கும் 
மாதா மாரியை!

(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்