த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

Mar 17, 2026,02:54 PM IST

சென்னை : சமீப காலமாக நடிகள், நடிகைகள் குறித்து அரசியல் பிரமுகர்கள் பலரும் தொடர்ந்து தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை முன்வைப்பது தொடர்ந்து அதிகரித்து வருவது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


சமீபத்தில் நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜய் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷாவின் பெயரை குறிப்பிட்ட தனிப்பட்ட விமர்சனங்களை முன் வைத்தார். இதற்கு நடிகை த்ரிஷா மட்டுமின்றி பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்று செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என பலரும் கூறினார்கள். கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்ததால், தனது கருத்திற்காக நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.


த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டி, அது த்ரிஷா தான் என பலரும் அவரின் பெயரை குறிப்பிட்டே சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டார்கள். இந்த கருத்துக்கள் பரவி வந்த அதே வேளையில் விஜய், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில் ஒன்றாக வந்து இறங்கியது தொடர்பாகவும் சர்ச்சை பேச்சுக்கள் எழுந்தது. த்ரிஷா பற்றி விமர்சனங்கள் இன்னும் முடியாமல் போய் கொண்டிருக்கிறது.




இதற்கிடையில் தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, திமுக மிரட்டியதால் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற ஒரு கருத்தை சமீபத்தில் தெரிவித்தார். திமுக அரசுக்கு எதிரான கண்ட ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் எதற்காக ரஜினி பற்றி அவர் பேசினார் என தெரியவில்லை. இதற்கு நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமி, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆதவ் அர்ஜூனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நயினார் நாகேந்திரன். ரஜினி ரசிகர்களும் இதில் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், இன்று ரஜினியே ஆதவ் அர்ஜூனா கூறியது உண்மைக்கு புறம்பானது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.


த்ரிஷா, ரஜினி பற்றிய சர்ச்சைகள் முடிவுக்கு வராத நிலையில், இன்று திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது அதிமுக எம்.பி.,யான சி.வி.சண்முகம், நயன்தாரா பற்றி பேசி புதிய சர்ச்சையை துவக்கி வைத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், " உங்கள் கனவுகளை சொல்லுங்கள், நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். நயன்தாரா வேணும். இது தான் என் கனவு. இதை நிறைவேற்றி வைப்பாரா?" என பேசி உள்ளார். 


அரசியல் காரணங்களுக்காக நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருவதும், பிறகு அது கண்டனத்திற்கு உள்ளாவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் களத்தில் ஏன் நடிகர், நடிகைகள் குறிவைத்து விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்