பெற்றோர்களின் கடமை

Aug 03, 2026,04:06 PM IST

- வி.பி.ஸ்ரீநிவாசன்


ரவியின்  வீடு. இரவு 7 மணி. ஹாலில் அவன் மகன் ராமு மறு நாள் நடக்கவிருக்கும் கணிதத் தேர்விற்கு கணக்குகளை போட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.


ரவி  அங்கு வந்தான்.


"நான் டிவியில் இந்தியா–இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் பார்க்கணும். நீ அந்த அறையில் படி"


ராமு பக்கத்து அறைக்குச் சென்றான்.


"கதவை போட்டுக்கோ"


மேட்ச் துவங்கியது. ராமு கதவை கொஞ்சமாகத் திறந்து கேட்டான்.


"அப்பா, யாரு பேட்டிங்?"


"இந்தியா. நீ எட்டி எட்டி பார்க்காதே. கணக்கை கவனித்து போடு. அப்புறம் மார்க் குறைஞ்சா நான் திட்டுவேன்".


ராமு கதவை நன்கு மூடிக் கொண்டான்.


சிறிது நேரத்தில் ரவியின் மனைவி ரம்யா அங்கு வந்தாள்.


"என்னங்க, நான் ஒன்னு கேட்கலாமா?"


"என்ன, செலவுக்கு பணம் ஏதாவது வேண்டுமா?"


"அது இல்லை. இது வேற."


"சரி, கேள்"


"இந்த மேட்ச் பார்க்கறீங்களே, உங்களுக்கு எவ்வளவு பணம் தருவாங்க?"


"எனக்கு ஏன் தரணும்? விளையாடறவங்களுக்குத்தானே தருவாங்க"




"அப்ப வேறு என்ன கிடைக்கும்?"


"இது என்ன கேள்வி? மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். அவ்வளவுதான்".


"சரி, பணமும் மகிழ்ச்சியும் கிடைக்கிற ஒன்னை சொல்றேன். அதை செய்வீங்களா?"


"என்ன சொல்றே? புரியலையே"


"இப்ப நம்ப வீட்டு தோட்டத்தில வாழை மரங்களை வைத்திருக்கிறோம். நிறைய வாழைக்காய், வாழைப்பூ அடிக்கடி கிடைக்கிறது. சாப்பிட இலையும் கிடைக்கிறது. அதனால நமக்கு மகிழ்ச்சியும் கிடைக்கறது; செலவும் மிச்சமாகிறது. அதாவது வருமானம் கிடைக்கிறது. இல்லையா?"


"ஆமாம்"


"அவ்வாறு கிடைப்பதற்கு நாம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்"


"ஆமாம். தினம் தண்ணி ஊற்றுகிறோம். அவ்வப்போது எரு போடுகிறோம். சரி, இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்லிண்டிருக்கே? என்னை மேட்ச் பார்க்க விடேன்"


"அது போல நம்ப பையன் ராமு நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி நல்ல வேலையில சேர்ந்து கை நிறைய சம்பாதிச்சா நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். வீட்டிற்கு நல்ல வருமானமும் கிடைக்கும். இல்லையா?"


"ஆமாம். இதில் என்ன சந்தேகம்?"


"அப்படி அவன் உயர்ந்த நிலைக்கு வர அவன் கடினமா உழைக்கிறான். நாமும் அவனுக்கு உதவனும். அதுதானுங்க 'பெற்றோர்களின் கடமை'."


"எப்படி உதவனும்ங்கிறே?"


"ஒரு மாணவனுக்கு 'பெற்றோர்கள்தான் முதல் ஆசிரியர்கள்'. அதனால் அவன் படிக்கும் பொழுது அவன் கவனம் வேறு எதிலும் போகாதபடி நாம பார்த்துக்கனும். பாடங்களை படிக்கும் பொழுது கூட இருந்து கொண்டு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் முடிந்த அளவு சொல்லித்தரனும். நாளைக்கு அவனுக்கு கணக்கு பரிட்சை. நீங்க கணக்கில் ஏதாவது சந்தேகம் இருந்தா சொல்லித்தாங்க. அதை விட்டுட்டு மார்க் குறைந்தால் திட்டுவதில் பயனில்லை. நான் கூட டி.வி.யில சீரியல் பார்க்கிறதை விட்டுட்டேன். நீங்களும் எல்லா மேட்சுகளையும் பார்க்காமல் முக்கியமான மேட்ச்களை மட்டும் பாருங்க. அவனுடைய முன்னேற்றத்திற்கு நாம சிலவற்றை தியாகம் பண்ணித்தான் ஆகனும்.


ரவி ஒரு நிமிடம் யோசித்து பின் டி.வி.யை அனைத்து விட்டான்.


"ரம்யா, நீ சொல்வது முற்றிலும் சரி. இனிமே அவன் படிக்கச்ச உதவுவதான் என் வேலை. அவனை கூப்பிடு. கணக்கு சொல்லித் தரேன்"


ரம்யா எழுந்து சென்று ராமுவை அழைத்தாள்.


"ஏம்பா டி.வி.யை அனைச்சிட்டீங்க?"


"மழை வந்துடுத்து. அதனால ஆட்டம் நின்றுவிட்டது. சரி, வா. இங்க உட்கார்ந்து கணக்கை போடு. ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேள். சொல்கிறேன்"


ரவியின் மனம் மாறியது குறித்து ரம்யாவும் ராமுவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.


(வி.பி.சீனிவாசன், அம்பத்தூர், ஒய்வுபெற்ற மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்