திருச்சியை திகிலில் ஆழ்த்திய ஏர் இந்தியா விமானம்.. பைலட்டின் திறமையால்.. உயிர் தப்பிய 141 பயணிகள்!

Oct 11, 2024,10:57 PM IST

திருச்சி: திருச்சியிலிருந்து ஷார்ஜா கிளம்பிய விமானம் திடீரென தொழில்நுட்பக் கோளாறில் சிக்கி தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்த நிலையில் தற்போது பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயணிகள், விமான ஊழியர்கள் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் திறமையாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்ட விமானியால் 141 பயணிகளும், ஊழியர்களும் உயிர் தப்பியுள்ளனர்.


திருச்சியிலிருந்து இன்று மாலை ஐந்தரை மணியளவில் ஷார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. ஆனால் கிளம்பி பாதி தூரம் சென்ற நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரிய வந்து விமானி விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டார். உடனடியாக திருச்சியிலேயே விமானத்தை தரையிறக்க அவருக்கு உத்தரவு கிடைத்தது. இதையடுத்து ஏழரை மணியளவில் விமானம் திருச்சியை வந்தடைந்தது. 


ஆனால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வானிலேயே வட்டமடித்தபடி இருந்தது விமானம். நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதனால் விமானத்தில் இருந்த பயணிகளும், விமான நிலையத்தில் இருந்தோரும் பதட்டமடைந்தனர். அந்தப் பகுதியில் பரபரப்பு கூடியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தை தரையிறக்க முடியாமல் தவித்தார் விமானி.




விமானம் சிக்கலில் இருப்பதை உணர்ந்து விமான நிலையத்தில் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டன.  ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டன. விமானப் போக்குவரத்து சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடிய நிலையில் எட்டேகால் மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருளை குறைப்பதற்காக விமானம் நீண்ட நேரம் வட்டமடித்ததாக கூறப்படுகிறது. விமானம் இறங்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் எரிபொருளால் மேலும் விபரீதம் ஏற்படும் என்பதால் வழக்கமாக இது போல செய்வது இயல்புதான். ஆனால் நீண்ட நேரம் திருச்சி விமானம் வட்டமடித்ததால் பரபரப்பு கூடி விட்டது.


விமானத்தை விமானி பெலிசோ பத்திரமாக தரையிறக்கியதால் அவர் பெரும் பாராட்டுக்குள்ளாகியுள்ளார். அவரது சாதுரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். விமானம் பத்திரமாக தரையிறங்கிய பின்னர்தான் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். உடனடியாக விமான பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அதேசமயம் பல பயணிகள் பயத்தில் உறைந்து போயிருந்ததால் சகஜ நிலைக்கு அவர்களால் உடனடியாக வர முடியவில்லை.


கேப்டன் - துணை கேப்டனுக்கு பாராட்டு




இந்த விமானத்தில் கேப்டனாக பணியாற்றியவர் இக்ரம் ரிபாட்லி பஹாமி ஜெய்னால் மற்றும் துணை கேப்டனாக பணியாற்றியவர் மைத்ரேயி ஸ்ரீகிருஷ்ணா ஷிடோலே. இருவரும் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேறினர். அப்போது இருவரையும் அங்கிருந்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.


பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை




விமானத்தில் லேன்டிங்கியரில் ஏற்பட்ட சிக்கல்தான் விமானத்தால் உடனடியாக தரையிறக்க முடியவில்லை. இதனால்தான் நீண்ட நேரம் எடுத்து எரிபொருளைக் குறைத்த பின்னர் பாதுகாப்பான முறையில் விமானத்தை தரையிறக்கியுள்ளனர். விமானம் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபோது பயணிகளுக்கு அது தொடர்பான காரணத்தை சொல்லவில்லை. சொன்னால் பயணிகள் பீதி அடைந்து பயந்து போவார்கள் என்பதால் எதுவும் சொல்லவில்லை.


விமானம் தரையிறங்க சிறிது நேரத்திற்கு முன்புதான் என்ன பிரச்சினை என்பதை பயணிகளுக்குச் சொல்லியுள்ளனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர். விமானியும், விமானத்தில் இருந்த ஊழியர்களும் மிகவும் திறமையாக இந்த சிக்கலை கையாண்டு அத்தனை பயணிகளும் பத்திரமாக இறங்குவதற்கு வழி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் நிம்மதி 


முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை விடுத்துள்ளார்.  ஏர் இந்தியா  விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது குறித்து அறிந்து நிம்மதி அடைந்தேன். லேன்டிங் கியர் பிரச்சினையால் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது குறித்து அறிந்ததும் நான் உடனடியாக அவசரக் கூட்டம் நடத்தி அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டேன்.


மாவட்ட ஆட்சித் தலைவரையும் தொடர்பு கொண்டு அனைத்துப் பயணிகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தேன். விமானத்தை மிகவும் பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு எனது பாராட்டுகள் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை

news

TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்

news

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்