- உமாராணி சங்கரலிங்கம்
ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
ஜூலை 2ஆம் தேதி.2022 சனிக்கிழமை.
காலை 5.30 க்கு எழுந்து 7 மணிக்குத் தயார் ஆகி விட்டோம் ,நாங்கள் நால்வரும்.
ரயிலில் வந்த மற்ற 12 பேரும் வந்தனர். தெரிந்தவர்கள். 4 பேர். மற்ற எல்லோரும் புது முகங்கள். ஒரு மினி பஸ் ஏற்பாடு செய்திருந்தார் முருகராஜ். பெரிய பைகளை வண்டியினஂ மேலே வைத்துக் கட்டி விட்டார்கள். Back bag, snacks பைகளை மட்டும் எங்களுடன் வைத்துக் கொண்டோம். காசிக்கு எங்களோடு வந்த பாஸ்கர் அண்ணா, அவர்கள் மனைவி சுப்புலட்சுமி, செந்தில் தம்பி மட்டும் தெரிந்தவர்கள். இப்பொழுது செந்தில் தன் மனைவி சங்கீதா வை அழைத்து வந்திருந்தார். அங்கே காபி,பால் (நான் காபி,டீ குடிக்காததால்) குடித்துவிட்டு 8 மணிக்குக் கிளம்பினோம்.

3 முறை ஓம் நமசிவாய மந்திரம், பின் காப்புப் பாடல் பாடி விட்டுப் பின் ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். செல்லும் வழியெல்லாம் ராணுவ ஜவான்கள்தான். 9.30 மணி அளவில் நடு ரோட்டில் சிலர் கொடி பிடித்து வண்டியை நிறுத்தினார்கள். சிறு கலக்கம் எல்லோருக்கும்.
பண்டாராஸ் எனப்படும் இடம் அது. அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு இலவசமாக சாப்பாடு அளித்து சந்தோஷப்படுகிறார்கள். இலவசம் என்றதும் சாதாரணமான சாப்பாடு கிடையாது. அருமையான சாப்பாடு. மருத்துவ வசதிகளும் இருந்தது. சிறப்பான மரியாதை. இனிப்பு, பூரி, டோக்லா, சாதம், பருப்பு, சாம்பார், டீ, பிஸ்கட், ஸ்னாக்ஸ், சாக்லேட்டுகள்.. எல்லாமே உண்டு. சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் மீதம் வைக்கக் கூடாது.

இதே மாதிரி பண்டாராஸ் நாங்கள் செல்லும் வழி எல்லாம் இருந்தது. மீதம் வைத்தால் நம்மை அவர்கள் கும்பிட்டு சாப்பிடச் சொல்கிறார்கள். எனவே நாங்கள் தேவையானவற்றை எடுத்து சாப்பிட்டுப் பின் எங்கள் யாத்திரையைத் தொடர்ந்தோம். 10.30 மணி போல வேன் மலை ஏற ஆரம்பித்து விட்டது. உதாம்பூர் ஊரைக் கடந்தோம். சிறு சிறு கிராமங்கள் வயல்களின் நடுவே இருந்தன.
துப்பாக்கி வைத்திருந்த வீரர்கள் நிரம்பிய ராணுவ அணிவகுப்பு பெரிய வேன் ஒன்று எங்களுக்கு முன்னால் செல்ல நடுவே எங்களைப் போல யாத்திரிகர்கள் வண்டிகள் 20 செல்ல கடைசியில் ஒரு அணிவகுப்பு வேன். மிகுந்த பாதுகாப்பு போகும் வழியெல்லாம் இருந்தது. அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் மக்களை வரவேற்கும் நிறைய பதாகைகள் அங்கங்கே இருந்தன. ஏதாவது போக்குவரத்து சிக்கல் ஆகி பஸ் நின்று நம் கீழே இறங்க முயன்றால் வீரர்கள் நம்மை இறங்கக் கூடாது எனக் கூறுகிறார்கள்.

ஏனெனில் தூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் தாக்குதல் வரலாம் என்பதால் தான். ஏதாவது தாக்குதல் வந்தால் அதை சமாளிப்பதற்காக convoy military நம்முடனே வருகிறார்கள். துப்பாக்கி வைத்திருந்த வீரர்கள் மேல் மரியாதை வந்தது. செல்லும் வழியில் நின்றிருந்த வீரர்களை நோக்கி கை அசைத்து எங்கள் சந்தோஷத்தைக் காட்டினோம். அவர்களும் எங்களுக்குப் பதிலுக்குக் கை ஆட்டினார்கள்.
மதியம் 1 மணி வாக்கில் ராம்பன் என்ற இடத்திற்குச் சென்றோம். 3.10க்கு பனிஹால் என்ற இடத்திலிருந்து 8.50 கிலோமீட்டர் தூரம் உள்ள tunnel க்குள் நுழைந்தோம். வெளியே வரும் இடத்தில் ஒரு செக் போஸ்ட். நாங்கள் 3.35க்கு அந்த இடத்தை அடைந்தோம். 3.30 க்குள் வந்தால் தான் மேற் கொண்டு செல்ல அனுமதி வழங்குகிறார்கள். எங்களையும் ,பின்னால் வந்த வண்டிகளையும் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
எனவே நாங்கள் திரும்பவும் டன்னல் வழியாக ஆரம்பித்த இடத்திற்கு வந்தோம். பஸ்ஸை நிறுத்தி விட்டு back bag எடுத்துக் கொண்டு நடந்தோம். அங்கே மிகப் பெரிய லங்கா இருந்தது. லங்கா என்றால் நூற்றுக்கணக்கான சிறு சிறு கடைகள். இலவசச் சாப்பாடு கொடுக்கும் இடங்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அறக்கட்டளைகள் மூலம் மக்கள் யாத்திரை செல்பவர்களுக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள், ராணுவத்தின் கண்காணிப்போடு.

மருத்துவ வசதிகளும் அங்கிருந்தன. ரொட்டி, பருப்பு,சாதம், கூட்டு , கொண்டைக்கடலை குழம்பு, டீ, ரஸ்க், பிஸ்கெட் இருந்தன. நான் ஒரு கடையில் இரவில் பால் வேண்டும் எனக் கேட்க, இல்லை எனக் கூறாமல் காத்திருக்கச் சொல்லி தந்தார்கள். நிறைய நடமாடும் கழிப்பறைகள் கட்டி வசதி செய்து வைத்திருந்தார்கள். சுற்றிலும் மலை சூழ்ந்து மிகவும் நன்றாக இருந்தது அந்த இடம். 7.45 மணிக்கு தான் இருட்டியது. அன்று இரவு ஒரு கடையில் பின்னால் எங்களுக்குப் படுக்க இடம் ஒதுக்கித் தந்தார்கள். எல்லா கடைகளிலும் மக்கள் படுத்திருந்தனர். குளிருக்கு ரஜாய் கொடுத்தார்கள். அடுத்த நாள் விரைவாக எழுந்து கிளம்ப வேண்டும் எனக்கூற சிலர் படுத்து விட்டனர்.சிலர் பேசிக்கொண்டு இருந்தனர். அடுத்த நாளை எதிர்நோக்கியபடி படுத்துறங்கினோம்.
ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
(பயணம் தொடரும்)
(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)
Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!
Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!
CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?
கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!
CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!
Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!
Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!
MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்
CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்
{{comments.comment}}