வாச்சாத்தி வன்கொடுமை.. பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமான நீதி.. டாக்டர் ராமதாஸ்

Sep 30, 2023,10:51 AM IST

சென்னை: வக்கிரத்தின் உச்சத்திற்கு சென்ற வாச்சாத்தி வன்கொடுமைக்காக மக்களுக்கு தாமதமாகவே நீதி கிடைத்துள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலை கிராம மக்களுக்கு 1992ம் ஆண்டு நடந்த வன்கொடுமைக்கு தற்பொழுது நீதி கிடைத்துள்ளது. மனிதகுல வரலாற்றில் மனிதனால் மனிதனுக்கு நடந்த வக்கிரத்தின் உச்சத்திற்கு 30 வருடங்களுக்கு பின்னர் தற்பொழுது தான் நீதி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளிட்ட அறிக்கை:


தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி  தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மற்றும் வனத்துறையைச் சேர்ந்த 27 அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், அரசு வேலை அல்லது சுயதொழில் தொடங்க உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் முழுமையாக  ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமாகவேனும்  நீதி கிடைத்துள்ளது.


வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் உள்ள வாச்சாத்தி கிராம  மக்களுக்கு 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் நாள் வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைத்து அரங்கேற்றிய கொடூரங்களும், வக்கிரங்களும் மனித குலத்தால் நினைத்துப் பார்க்க முடியாதவை. வாச்சாத்தி கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி குழந்தைகள் உட்பட 133 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வளவுக்குப் பிறகும் வாச்சாத்தி கொடுமைகளுக்கு நீதி வழங்க வேண்டிய அன்றைய தமிழக அரசு, அனைத்தையும் மூடி மறைக்கவே  முயன்றது. நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு வாச்சாத்தி மக்களுக்கு நீதி பெற்றுத்தரப்பட்டுள்ளது. 


காவல்துறை, வனத்துறை போன்ற வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் கொண்ட  அமைப்புகள், எளிய மக்களிடம் அத்துமீறுவதையும், தங்களுக்கு மேலிடத்திலிருந்து வரும் அழுத்தங்களை தணித்துக் கொள்ள அப்பாவி மக்களை கொடுமைப்படுத்துவதையும்  வழக்கமாகக் கொண்டுள்ளன. மனித உரிமைகளைப் பற்றி இந்த அமைப்புகள் கவலை கொள்வதே இல்லை. அதற்கான சிறந்த எடுத்துக் காட்டு தான் வாச்சாத்தி  வன்கொடுமை ஆகும்.  இந்த தீர்ப்புக்கு பிறகாவது  சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் மனிதர்களையும், மனித உரிமைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.


வாச்சாத்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்களா? என்பதைப் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.10 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். வாச்சாத்தி மக்கள் சுய தொழில் செய்யும் நிலையில் இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட 18 பேரின் குடும்பத்தில் உள்ள  தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும்  மேலாக வாச்சாத்தி வன்கொடுமை போன்ற குற்றங்கள் நடைபெறும் போது, அதை மூடி மறைக்க முயலாமல், வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும், குற்றம் செய்தவர்களை தண்டிப்பதற்கும் தேவையான அரசியல் துணிச்சலை தமிழக அரசு பெற வேண்டும் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு

news

மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்

news

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்

news

செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ

news

அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்

news

823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்

news

மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

news

ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்