இது நவராத்திரி காலமாக இருப்பதினால் வழிபாடு பற்றி எழுதலாம் என்று தோன்றியது.. நன்றி உணர்வு தான் உண்மையான வழிபாடு என்று எனக்கு தோன்றுகிறது..
கேளுங்கள் கொடுக்கப்படும்..இதை நாம் படித்திருக்கிறோம்.. கேட்பது வழிபாடா? நாம் அப்படித்தான் பழகி இருக்கிறோம். கோயிலுக்கு போனால், வேண்டுதல்கள் வைத்து வரம் கேட்போம்.. இதை நிறைவேற்றினால் நான் அதை செய்கிறேன் என்று கடவுளுடன் உடன்பாடு (Dealing) செய்து கொள்வோம் அப்படித்தானே?
நாம் தெருவில் செல்லும் போது மழை பிடித்துக் கொண்டால், நம் பக்கத்தில் இருப்பவர் நமக்கு ஒரு குடை கொடுத்து உதவினால் எவ்வளவு நன்றியுரைப்போம் இல்லையா? ஆனால் இந்த படைப்பு என்னும் சக்தி எவ்வளவு விஷயங்களை மிகச் சாதாரணமாக நமக்காக செய்து கொண்டிருக்கிறது.. எல்லாமே அதிசயமாக நடக்கிறது.. எல்லாமே மிகச் சரியாக (Perfect) நடப்பதால் அதை நாம் பார்க்க தவறுகிறோம்.. அதனால் நமக்கு நன்றி உணர்வு தோன்றுவதில்லை..
எப்பவுமே எதையும் சரியாக செய்யும் மனைவியின் சமையலுக்கு சபாஷ் கிடைப்பதில்லை.. என்றாவது ஒருநாள் ஒரு சிறிய தவறு நிகழ்ந்தாலும் அதை பெரிதுப்படுத்தி கத்தும் கணவர்கள் தான் அதிகம் இல்லையா?
காலையில் சூரியன் உதிக்கிறது.. நிலவு கரெக்டாக வருகிறது…தேய்கிறது.. முழு நிலவாகிறது.. நம் மூச்சு நடக்கிறது.. நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் அதன் வேலையை அவ்வளவு அழகாக செய்து கொண்டே இருக்கிறது..இதயம் துடிக்கிறது சிறுநீரகம் அதன் வேலையை செய்கிறது.. காது கேட்கிறது.. கண் பார்க்கிறது.. ஆனால் இந்த இதயத்தை துடிக்க வைக்க சிறுநீரகத்தை இயக்க நாம் ஏதாவது செய்கிறோமா? அது நடக்கிறது.. இல்லையா? எவ்வளவு பெரிய அதிசயம்.. !
இதை அதிசயமாக பார்த்தால் மனது நன்றி உணர்வால் நிறைகிறது.. அந்த படைப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.. அப்போ… இதை எல்லாம் நாம் பார்க்க தவறுகிறோம்.. தவறுகளை மட்டுமே நாம் பெரிது படுத்துகிறோம்..
மனம் நன்றி உணர்வால் நிறைந்திருக்கும் போது குறைகளை பெரிதுபடுத்த தோன்றாது.. உண்மையா இல்லையா?
அப்போது எல்லாமே மிகச்சரியாக (Perfect) நடத்திக் கொண்டிருக்கும் இந்த படைப்பின் புத்திசாலித்தனத்திற்கு முன்னால் நமக்கு எதையும் கேட்கத் தோன்றுவதில்லை.. அப்படியே நாம் கேட்டாலும் என்ன கேட்டு விட முடியும்.. நமக்கு என்ன தெரியும்? ஆசைகள் எல்லாமே அடுத்தவர்களை பார்த்து நாம் கேட்பது தானே? அடுத்தவர் BMW கார் வைத்திருந்தால் அது மாதிரி வேண்டுமென்று ஆசைப்படுவோம் அவ்வளவே!
ஒரு சிறிய கதையை பார்ப்போமா?
காஷ்முஷ் ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தார் அங்கு ஒரு ஞானி பேச வந்திருந்தார் அவர் ஆசைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் அப்போது அவர் கேட்டார் கூட்டத்தை நோக்கி.. யார் யாருக்கு பெரிய பங்களா மற்றும் கார் வேண்டும் என்று கை உயர்த்த சொன்னார்.. அந்தக் கூட்டத்தில் இருந்த பெரும்பாலோர் கை உயர்த்தினார்கள் காஷ்முஷ் உட்பட!
நமக்கு தேவையா மற்றும் அதை சமாளிக்க முடியுமா என்று நாம் யோசிப்பதில்லை..
திரும்பவும் ஒரு கேள்வி கேட்டார்.. காஷ்முஷை பார்த்து பதில் கூறச் சொன்னார்.. ஏனெனில் காஷ்முஷ் மெலிந்த தேகம் உடையவர்.. யாருக்கு 44 சைஸ் உள்ள மிகவும் காஸ்ட்லியான (Branded) கால் சட்டை (Pant) வேண்டும் என கேட்க.. கூட்டத்தில் இருவர் மட்டுமே கை உயர்த்தினர்.. காஷ்முஷ்க்கு சத்தியமாக பொருந்தாது.. காஷ்முஷ் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.. நமக்கு பொருத்தம் இல்லாததை நாம் தேவை இல்லாமல் எவ்வளவு ஆசைப்படுகிறோம் இல்லையா ?
ஆகையால் மிகச் சிறந்த வழிபாடு என்பது நன்றி உணர்வு மட்டுமே.. அந்தப் படைப்பு சக்திக்கு நம் வார்த்தைகள் புரிவதில்லை ஆனால் நம்முடைய உணர்வுகள் நன்றாக புரியும்..
நன்றி உரைப்போம்.. அதைவிட சிறந்த வழிபாடு வேறொன்றும் இல்லை..
Everything is happening so perfectly ! And Each one of us is already a Master Piece! (மிகச்சிறந்த படைப்பு)
இதைப் படித்ததற்காக உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி..
நாம் தொடர்வோம்…….
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.
{{comments.comment}}