திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அக்கா இறந்த துக்கத்தில் தம்பியும் இறந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
என்ன சோகம் என்றால் அக்காவின் வயது 104, தம்பியின் வயது 102 ஆகும் என்பதுதான். ஊரே கூடி அவர்களுக்காக கண்ணீர் உகுத்தது.
வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளி அம்மாள். இவருக்கு வயது 104 ஆகும். நேற்று மாலை 5 மணிக்கு வயது மூப்பு காரணமாக காலமானார் வள்ளி அம்மாள். அவருக்கு துரைசாமி என்ற தம்பி இருந்தார். அவருக்கு வயது 102 ஆகும். அக்காவும், தம்பியும் அப்படி பாசமாக இருப்பார்களாம். அக்கா மீது தம்பிக்கு உயிராம்.
அப்படிப்பட்ட அக்கா மரணத்தைத் தழுவியதைக் கேட்டு தம்பி துரைசாமி அழுதபடி இருந்தார். அவரால் அக்காவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு, தம்பி துரைசாமி காலமானார்.. அக்காவின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பியும் மரணத்தைத் தழுவியதால் அந்தக் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ஊரே சோகமானது.
இன்றைய காலகட்டத்தில் பணம் தான் பெரிது என்று நீ யாரோ நான் யாரோ என்று வாழும் உடன்பிறப்புகள் தான் அதிகமாக உள்ளனர். சொத்து தகராறில் தம்பியை கொல்லும் அளவிற்கு துணியும் அண்ணன்களும் உண்டு. அண்ணனை கொல்லும் அளவிற்கு துணியும் தம்பிகளும் உண்டு. நமக்கு தெரிந்த செய்தி கொஞ்சம் என்றால் தெரியாமல் நடக்கும் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை எனலாம்.
இப்படிப்பட்ட காலத்தில் அக்காவும் தம்பியுமாக, பாசத்துடன் வாழ்ந்து இரு குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்த வள்ளி அம்மாளும், துரைசாமியும் மரணத்திலும் இணைந்தது அனைவரையும் உருக வைத்துள்ளது.
{{comments.comment}}