உருவானது வெர்டிஸ் நாடு.. 20 வயது இளைஞரின் அதிரடி.. ஆனால் இது கைலாசா மாதிரி கிடையாது!

Aug 07, 2025,06:25 PM IST

பெல்கிரேடு: செர்பியாவுக்கும், குரேஷியாவுக்கும் இடையே ஓடும் தன்யூப் நதிக் கரையையொட்டி உள்ள 125 ஏக்கர் நிலத்தில் ஒரு குட்டி நாடு உருவாகியுள்ளது. இதை உருவாக்கியிருப்பவர் 20 வயதேயான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேணியல் ஜாக்சன் என்ற இளைஞர். உலக அளவில் இது ஹைலைட்டாகி வருகிறது.


வெர்டிஸ் என்ற வனப் பகுதியில் உள்ள இந்த 125 ஏக்கர் நிலமும் யாருக்குச் சொந்தம் என்பதில் செர்பியாவுக்கும், குரேஷியாவுக்கும் இடையே வாய்க்கால் தகராறு இருக்கிறது. இதனால் இந்த இடத்தில் யாரும் வசிக்கவில்லை. இந்த இடமும் அனாமத்தாக கிடக்கிறது. இந்த இடத்தில்தான் தற்போது தனி நாடாக அறிவித்திருக்கிறார் ஜாக்சன்.




இந்த நாட்டுக்கு வெர்டிஸ் குடியரசு என்றும் பெயரிட்டுள்ளார். இங்கு 400 பேர் குடிமக்களாக உள்ளனர் என்றும் கூறுகிறார் ஜாக்சன். அதேசமயம், இந்த குட்டி நாட்டை எந்த ஒரு சர்வதேச நாடும் அங்கீகரிக்கவில்லை, எந்த சர்வதேச அமைப்பும் அங்கீகரிக்கவில்லை. கிட்டத்தட்ட நித்தியானந்தாவின் கைலாசா போலத்தான் இதுவும். 


2019-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி,  ஜாக்சன் இந்த இடத்தை 'சுதந்திர குடியரசு வெர்டிஸ்' (Free Republic of Verdis) என அறிவித்தார். இந்த நாட்டுக்கென ஒரு கொடி, அமைச்சரவை, அடிப்படை அரசியலமைப்பையும் ஜாக்சன் உருவாக்கியுள்ளார். இந்த வெர்டிஸ் அரசுக்கென தனியாக இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார். ஜாக்சன்தான் இந்த நாட்டு அதிபராம். வெளியுறவுத்துறை அமைச்சர் கூட இருக்கிறாராம்.




இதுவரை 400 பேருக்கு இங்கு குடியுரிமை கொடுத்துள்ளனராம். இதுதவிர லாரி லாரியாக அதாவது.. ஆயிரக்கணக்கானோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெர்டிஸ் சொந்த பாஸ்போர்ட்டையும் தருகிறதாம். ஆனால் அதை வேறு எங்கும் பயன்படுத்த முடியாதாம்.


ஜனநாயக விழுமியங்கள், இனக்குழுக்களின் நல்லிணக்கம், நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதே தனது நாட்டின் முக்கிய நோக்கம் என்று கூறுகிறார் ஜாக்சன். இது ஒரு மைக்ரோநேஷன் என்பதால், எந்தவொரு ஐக்கிய நாடுகள் சபை (UN) உறுப்பு நாடும் அல்லது பிற சர்வதேச அமைப்புகளும் இதை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கவில்லை.


இந்த குட்டி நாட்டை தொடங்கியபோது வெறும் நான்கு பேர்தான் உறுப்பினர்களாக அதாவது குடிமக்களாக இருந்தனர். ஆனால் இப்போது 400 ஆக பெருகியுள்ளதாம். மருத்துவம் மற்றும் காவல்துறை போன்ற அத்தியாவசிய துறைகளில் உள்ள திறன்களைக் கொண்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் வெர்டிஸ் கவனம் செலுத்துகிறது.




குரேஷிய அதிகாரிகள் இந்த மைக்ரோநேஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக்டோபர் 2023 இல், குரோஷிய காவல்துறை ஜாக்சன் மற்றும் பிற குடியிருப்பாளர்களைக் கைது செய்து, அவர்களை நாடு கடத்தி, அவருக்கு குரேஷியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதித்தது. இதனால் வெர்டிஸில் தற்போது யாரும் இல்லை. ஜாக்சனும் கூட உள்ளே நுழைய முடியாது. இதனால் அவர் செர்பியாவில் தங்கியிருக்கிறாராம்.


தற்போது, வெர்டிஸ், ஒரு வெளியிலிருந்து இயங்கும் அரசாக (government in exile) இருந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அதன் நிறுவனர் ஜாக்சன், ஒரு நாள் வெர்டிஸ் தனது சுதந்திரத்தை மீண்டும் பெறும் என்று நம்புகிறார்.


Images: verdisgov.org

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்