கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

Mar 17, 2026,01:46 PM IST

புதுடெல்லி: இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) பயன்படுத்தும் அனைத்து உள்நாட்டு நுகர்வோரும் இனி கட்டாயம் பயோமெட்ரிக் முறையிலான ஆதார் சரிபார்ப்பை (e-KYC) மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எரிவாயு மானிய முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் மானியம் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஏன் இந்த புதிய விதிமுறை? 


மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் சவால்கள் எழுந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டும், எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்தவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. போலி இணைப்புகளைக் கண்டறியவும், ஒரே நபர் பல இணைப்புகளை வைத்திருப்பதைத் தவிர்க்கவும் இந்த பயோமெட்ரிக் முறை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சரிபார்க்காவிட்டால் என்ன நடக்கும்?




இந்த e-KYC சரிபார்ப்பை முடிக்காத நுகர்வோருக்கு எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், அவர்களின் வங்கி கணக்கிற்கு வரும் எரிவாயு மானியம் (Subsidy) தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ் பயன் பெறும் நுகர்வோர், ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிப்பது அவசியமாகும்.


வீட்டிலிருந்தே KYC செய்வது எப்படி?


நுகர்வோர் தங்களின் விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீட்டிலிருந்தே இதனை எளிய முறையில் முடிக்கலாம்:


- உங்கள் எரிவாயு நிறுவனத்தின் (Indane, HP, or BharatGas) அதிகாரப்பூர்வ செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.

- அதனுடன் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 'Aadhaar FaceRD' என்ற செயலியை நிறுவ வேண்டும்.

- எரிவாயு செயலியில் லாகின் செய்து 'e-KYC' அல்லது 'Aadhaar Authentication' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் ஆதார் எண்ணைப் பதிவிட்டு, FaceRD செயலி மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து சரிபார்ப்பை முடிக்கலாம்.


நீண்ட நாட்களாக சிலிண்டர் வாங்காதவர்களுக்கு செக் :


கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக ஒருமுறை கூட சிலிண்டர் முன்பதிவு செய்யாத நுகர்வோரின் இணைப்புகள் 'செயலற்றவை' (Inactive) எனக் கருதப்படும். அத்தகைய நுகர்வோர் மீண்டும் சிலிண்டர் பெற வேண்டுமெனில், நேரில் சென்று பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை எரிவாயு விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் என்றும், உண்மையான பயனாளிகளுக்குத் தடையின்றி சிலிண்டர் கிடைக்க வழிவகை செய்யும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்