வங்கதேச விவகாரம்.. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்.. எதிர்க்கட்சிகள் உறுதி!

Aug 06, 2024,06:27 PM IST

டெல்லி:   வங்கதேச நிலவரம் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசித்தது. நிகழ்வுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விளக்கினார். அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.


வங்கதேசத்தில் பெரும் மக்கள் புரட்சி வெடித்து அது கலவரம் மற்றும் வன்முறையாக மாறியது. இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது இந்தியா வந்துள்ள அவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.




இதையடுத்து வங்கதேசத்தில் ராணுவ ஆதரவுடன் இடைக்கால ஆட்சி அமையவுள்ளது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் விடுதலை செய்யப்படவுள்ளார்.  அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. இந்தப் போராட்டத்தின்போது இந்திய எதிர்ப்பு மனோ நிலையையும் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தியதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.


இந்த நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன, எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இதுகுறித்து அனைத்துக் கட்சிகளுக்கும் விளக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 


அதன்படி இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஏராளமான கேள்விகளை எழுப்பினார். அவற்றுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார். இறுதியில் அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தனர்.




இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வங்கதேச நிகழ்வுகள் குறித்து விளக்கிக் கூறினேன். எதிர்க்கட்சிகள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக  ஒருமித்த குரலில் தெரிவித்தனர். அவர்களது புரிந்து கொள்ளுதலுக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் என்று கூறியுள்ளார் ஜெய்சங்கர்.


இன்று பிற்பகல் வங்கதேச நிலவரம் குறித்து நாடாளுமன்றத்திலும் எம்பிக்களிடையே உரையாற்றி விளக்கம் தரவுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.

சமீபத்திய செய்திகள்

news

ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!

news

Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!

news

மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)

news

நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்