சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை உயரக்கூடும் எனவும், வட தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் 4 டிகிரி வரை உயரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் வரும் மார்ச் 11ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்று மட்டும் ஏழு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 102.56 பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அதே போல் கரூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை, திருப்பத்தூர், வேலூர், ஆகிய இடங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட்டும்,சேலம் மற்றும் திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி , தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். குறிப்பாக வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும். சென்னையில் அதிகபட்சமாக நாளை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
11ஆம் தேதி கனமழை:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மிதமான மழை:
தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
{{comments.comment}}