சென்னை: சர்ச்சைக்கிடமான முறையில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய பேச்சாளர் மகாவிஷ்ணு தான் சொன்னபடி ஆஸ்திரேலியாவிலிருந்து இன்று பிற்பகல் சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் வைத்து மடக்கிய போலீஸார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
மதுரையைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு. பரம்பொருள் பவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வரும் இவர் பரம்பொருள் யோகா சொல்லிக் கொடுப்பதாக கூறிக் கொள்கிறார். தன்னம்பிக்கை பேச்சாளராக வலம் வருவதாகவும் இவரது அமைப்பின் பயோடேட்டா சொல்கிறது.
ஆனால் சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இவர் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போன பிறவியில் செய்த பாவத்தால்தான் இந்தப் பிறவியில் கண் தெரியாமல் கால் கை இல்லாமல் பிறக்கிறார்கள். நோய்களால் அவதிப்படுகிறார்கள் என்றெல்லாம் இவர் பேசினார். இதை எதிர்த்து தமிழ் ஆசிரியர் சங்கர் (இவர் பார்வை மாற்றுத்திறனாளி) ஆட்சேபனை செய்து பேசியபோது அவரையே கிண்டலடிக்கும் வகையில் பேசினார் மகாவிஷ்ணு.
இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவசரம் அவசரமாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டார். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர் சங்கரைப் பாராட்டிக் கெளரவித்தார். ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறிப் பேசினார். மேலும் மகாவிஷ்ணு என்னுடைய ஏரியாவுக்குள் வந்து எனது ஆசிரியரை அவமதித்துள்ளார். அவரை சும்மா விட மாட்டேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தில் அசோக்நகர் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, மகாவிஷ்ணுவை பேச விட்ட சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மகாவிஷ்ணு மீது தற்போது மாற்றுத் திறனாளிகள் பலரும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் தான் ஆஸ்திரேலியா வந்திருப்பதாகவும் இன்று பிற்பகல் 1.10 மணிக்கு சென்னை வருவேன். காவல்துறையில் விளக்கம் தருவேன் என்றும் கூறியிருந்தார் மகாவிஷ்ணு. அதன்படி இன்று அவர் சென்னை வந்து சேர்ந்தபோது அவரை சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீஸ் டீம் விசாரணை செய்தது. பின்னர் மேல் விசாரணைக்காக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விமான நிலையத்தில் பெருமளவில் போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}