- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையைக் கடந்த மிச்சாங் புயல் கோரத்தாண்டவம் ஆடி விட்டுப் போயுள்ளதன் முழு அளவிலான பாதிப்பு இப்போதுதான் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.
ஆரம்பத்தில் கணித்ததை விட அதிக அளவிலான பாதிப்பை மக்கள் சந்தித்துள்ளனர். சென்னை மாநகரமே புயல் மழையால் ஸ்தம்பித்துப் போனது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது மிகப் பெரிய பேய் மழை பெய்து சென்னையை திக்கு முக்காட வைத்துள்ளது. சென்னை மீண்டும் எப்போது பழைய நிலைமைக்கு திரும்பும் என மக்கள் பரிதவிப்புடன் உள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழு அளவில் இயல்பு நிலை வரவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்களுக்கு போதுமான அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கவில்லை. பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். தற்போது பல பகுதிகளில் தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடியாமல் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

பழவேற்காடு மீனவர்கள் பாதிப்பு: பழவேற்காட்டில் உள்ள சுமார் 50 மீனவ குடியிருப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான மீனவ மக்களின் வாழ்வாதாரம் படகுகளை நம்பி தான் இருக்கும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பெய்த புயல் மழையால் படகுகள் முழுவதும் நாசமாகின. கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்கள் தங்களின் வீடுகள், படகுகள், வலைகள் என அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர். பல்வேறு படகுகளை தண்ணீர் அடித்து சென்றது. இதனால் இவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இங்கு உள்ள மக்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. இப்பகுதி முழுவதும் நீருக்கு இரையாகி நாசமாகி உள்ளது.
அம்பத்தூரில் பெரும் நஷ்டம்: அம்பத்தூரில் சிறு, குறு நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. இங்குள்ள நிறுவனங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இயந்திரங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் சேதமாகின. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 2000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆவடி ,அம்பத்தூர் பகுதியில் வெள்ள நீர் வடிந்தும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
மிதக்கும் பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் ஏரி கரை உடைந்ததால் மளமளவென தண்ணீர் ஆர்ப்பரித்து வந்தது. சாலையில் உள்ள மரங்கள் அனைத்தும் அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் ஓடியது. கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதி முழுவதும் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்லாவரம் துரைப்பாக்கம் இணைப்பு சாலைகள் முழுவதும் நீரால் சூழப்பட்டு தனித்தீவு போல் காட்சியளிக்கிறது.

இப்பகுதியில் தண்ணீர் வடியாமல் இருப்பதால் என்ன செய்வதென்று அறியாமல் மக்கள் புலம்பி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் போதுமான உணவு ,பால் போன்றவை கிடைக்காமல் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்து உள்ளனர். இப்பகுதியில் உள்ள கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை மீட்க உரிமையாளர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர்.
வெனிஸ் நகரான வேளச்சேரி: சென்னையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது வேளச்சேரி. இங்கு இன்னும் தண்ணீர் வடியவில்லை. பல இடங்களில் மின்சாரம் இல்லை. தொலைத்தொடர்பு சிக்னல் பிரச்சினை உள்ளது. இப்பகுதிக்கு நாராயணபுரம் ஏரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் வந்ததால், மழை வெள்ளம் வீடுகளை முழுவதும் முற்றுகையிட்டது. இதனால் குடியிருப்புகள் தண்ணீர் புகுந்தது .வீட்டிற்குள் வைக்கப்பட்ட பொருள்கள் முழுவதும் நீருக்கு இறையாக்கின. மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர் .
வேளச்சேரியில் விஜிபி நகர், செல்வா நகர், போன்ற பகுதிகளில் தற்போது வரை இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. குழந்தைகளுக்கு போதுமான பால் கிடைக்கவில்லை. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வழி இல்லை. அணிந்துள்ள உடை முழுவதும் தண்ணீரில் நனைந்தது. தூங்க இடம் இல்லை. இரண்டு நாட்களாக மக்கள் சாப்பிட வழியில்லை. இப்படி பல்வேறு இன்னல்களை சந்தித்து அன்றாட வாழ்க்கைக்காக மக்கள் திண்டாடி வருகின்றனர்.
மிதக்கும் டான்சி நகர்: வேளச்சேரியில் உள்ள டான்சி நகர், விஜய நகர், ராம் நகர் போன்ற பகுதியில் தற்போது வரை தண்ணீர் வடியாமல் வீடுகள் முழுவதையும் ஆக்கிரமித்து உள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் எது சாலை எது தெரு என்று தெரியாத அளவுக்கு வேளச்சேரி பிரதான சாலை முழுவதும் தண்ணீர்க்கு இறையாகியுள்ளது.

தற்போது வரை இப்பகுதி முழுவதும் தொலைத்தொடர்பு, மின்சாரம் போன்றவை இல்லாததால் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக வேளச்சேரி சுற்றியுள்ள பகுதிகளை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். அவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டு பத்திரமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு காலை ,மதியம் ,இரவு என மூன்று வேளையும் அரசு உணவு வழங்கி வருகிறது .
இன்று காலை முதல்வர் அவர்கள் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மீட்பு படையினர் மட்டுமல்லாமல் தன்னார்வலர்களும் வந்து கலந்து கொண்டு இப்பகுதி மக்களை மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}