மதுரை: மதுரை, கட்ராப்பாளையம் பகுதியில் உள்ள விசாகா என்ற தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஃபிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அது வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் பகுதியில் விசாகா என்ற மகளிர் தங்கும் விடுதி உள்ளது. மிகவும் பழமையான கட்டடத்தில் இது இயங்கி வந்துள்ளது. இந்தக் கட்டடம் பலவீனமாக இருப்பதால் இதைக் காலி செய்ய வேண்டும் என்று கடந்த வருடமே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதி உரிமையாளர் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு உள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் விடுதியில் உள்ள ரெப்ரிஜிரிரேட்டரில் மின்கசிவு காரணமாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் 50க்கும் மேற்பட்டோர் அப்போது இருந்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் அசந்து தூங்கியிருந்துள்ளனர். இதனால் தீவிபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் வெளியே ஓடி வந்துள்ளனர்.

பெரியார் பேருந்து நிலையம் அருகில் தான் தீயணைப்பு நிலையம் இருப்பதால் உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெண்கள் தங்கும் விடுதி குறுகிய சாலையில் இருப்பதால் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கல் நீடித்தது. இருப்பினும் தீ விபத்தில் சிக்கி பரிமளா சௌத்ரி மற்றும் சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அறிந்து மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். அப்போது இந்த விடுதியின் உரிமையாளர் யார்..? இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது..? என்பது தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர்.
உரிமையாளர் கைது - கலெக்டர் சங்கீதா எச்சரிக்கை

இந்தக் கட்டத்தின் உரிமையாளர் தினகரன். பழைய கட்டடம் என்பதால் விடுதியைக் காலி செய்யுமாறு அதன் உரிமையாளர் இன்பா ஜெகதீசனை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இன்பா ஜெகதீசன் காலி செய்யாமல் இருந்துள்ளார். இதுதொடர்பாகத்தான் கோர்ட்டில் வழக்கும் உள்ளது. மோசமான நிலையில் இருந்த கட்டடத்தில் தொடர்ந்து விடுதியை நடத்தி வந்ததால், இந்த சம்பவத்திற்குக் காரணமானவராக அவரை குற்றம் சாட்டியுள்ள போலீஸார் தற்போது இன்பா ஜெகதீசனைக் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் அனைத்து விடுதிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். யாராவது அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினால் அந்த விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
ஃபிரிட்ஜ் வெடித்து இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}