மீண்டும்.. தே.ஜ.கூ.வில் இணைந்தது குமாரசாமியின் மதச் சார்பற்ற ஜனதாதளம்!

Sep 22, 2023,05:01 PM IST

டெல்லி: எச்டி குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இணைந்துள்ளது.


கர்நாடகத்தில் உள்ள முக்கியமான 3 கட்சிகளில் ஒன்று மதச்சார்பற்ற ஜனதாதளம். எச்.டி. தேவகவுடா நிறுவிய இக்கட்சியின் தலைவராக இருப்பவர் அவரது மகன் எச்.டி. குமாரசாமி. சமீப காலமாக குமாரசாமிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையே ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கப் போவதாகவும் பேச்சு அடிபட்டது.


இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு கூட முடிவடைந்து விட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் அதை குமாரசாமி மறுத்திருந்தார். இந்த நிலையில் இன்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குமாரசாமி சந்தித்தார். முறைப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


வருகிற லோக்சபா தேர்தலை பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து சந்திக்கவுள்ளதாக குமாரசாமி அறிவித்துள்ளார். 


பாஜக - மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையே கூட்டணி ஏற்படுவது புதிதல்ல. தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே உருவாகி பின்னர் கலையும் கூட்டணி இது. கர்நாடகத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைத்தபோது எதியூரப்பாவும், குமாரசாமியும் கூட்டணி அமைத்துத்தான் ஆட்சியைப் பிடித்தனர். அதில் உடன்பாட்டின்படி முதலில் குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். பின்னர் எதியூரப்பா வசம் முதல்வர் பதவியைக் கொடுக்காமல் தானே தொடர முடிவு செய்ததால் கோபமடைந்த பாஜக ஆதரவை வாபஸ் பெற குமாரசாமி அரசு கவிழ்ந்தது.


அதன் பின்னர் பாஜக தனித்து ஆட்சியைப் பிடித்தது. எதியூரப்பா தென்னிந்தியாவின் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார். அதற்கு அடுத்த சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் குமாரசாமியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தனர். குமாரசாமி முதல்வரானார். ஆனால் குறுகிய காலமே இந்த ஆட்சி நீடித்தது. பாஜக உள்ளே புகுந்து ஆபரேஷன் லோட்டஸை களம் இறக்கியது.


இதில் சிக்கி மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கட்சி தாவி பாஜகவில் இணைந்தனர். குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. அந்த ஆட்சியைத்தான் தற்போது சித்தராமையா - டிகே சிவக்குமார் தலைமையிலான  காங்கிரஸ் கட்சி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.


இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்துள்ளார் குமாரசாமி. இது எந்த மாதிரியான பலன்களையும், விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது போகப் போகத் தெரியும்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்