பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

Jun 14, 2025,06:21 PM IST

டெஹரான்: இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருவதால் பெரும் பதட்டம் அதிகரித்துள்ளது. மிகப் பெரிய யுத்தமாக இது மாறுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளன.


ஈரான் இஸ்ரேலைத் தாக்கக் கூடும் என்று ஒரு பேட்டியின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அவர் கூறிய சில நாட்களிலையே ஈரான் மீது அதிரடியான தாக்குதலைத் தொடுத்தது இஸ்ரேல். ஈரானின் அணு ஆயுத நிலைகள் மற்றும் ராணுவத்தை குறி வைத்து இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது.


இந்தத் தாக்குதலில் ஈரானின் ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள் என பலரும் உயிரிழந்தனர். ஈரான் தனது அணு ஆயுதத்தை ஏவுகணைகளில் பொருத்தும் வேலைகளில் ஈடுபட்டதை அறிந்துதான் இஸ்ரேல் தாக்கியதாக கூறப்படுகிறது. காரணம், ஈரான் வெற்றிகரமாக இதைச் செய்து விட்டால் இஸ்ரேலின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகி விடும் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்துள்ளது.




இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது ஈரானும் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேலிய நகரங்களை அது கடுமையாக தாக்கி வருகிறது. பல ஏவுகணைகளை இஸ்ரேல் பாதுகாப்பு கவசம் அழித்து விட்டாலும் கூட பல ஏவுகணைகள் இஸ்ரேல் நகரங்களுக்குள் விழுந்துள்ளன. குறிப்பாக தலைநகர் டெல் அவிவ் நகருக்குள்ளேயே ஈரான் தாக்குதல் நடத்தி அதிர வைத்துள்ளது. இஸ்ரேல் ராணுவத் தலைமையகம் அருகேயும் தாக்குதல் நடந்திருப்பதால் இஸ்ரேல் அதிர்ச்சி அடைந்துள்ளது.


டெல் அவிவ், ஜெருசலேம் என அனைத்து முக்கிய இஸ்ரேல் நகரங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இதனால் அந்த நகரங்களில் அபாய சைரன் ஒலித்துக் கொண்டே உள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


மத்திய கிழக்கில் கொந்தளிப்பான சூழல் நிலவும் வேளையில், இஸ்ரேலை ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து காத்து வந்த பாதுகாப்பு அரண் (Iron Dome) வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்திறன் தோல்வி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் பாதுகாப்புத் தலைமை அலுவலகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது இதை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள  ஒரு காணொளியில், டெல் அவிவின் மையப் பகுதியிலுள்ள பல இராணுவ அமைப்புகள், குறிப்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ஒரு பகுதியில் தாக்குதல் நடைபெறுவது தெளிவாகத் தெரிகிறது.


19 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளித் துண்டில், இஸ்ரேலின் பாதுகாப்பு கவச ஏவுகணை, ஒரு ஈரானிய ஏவுகணையை இடைமறிக்க முனைவதைக் காணலாம். ஆனால், அந்த ஏவுகணை இஸ்ரேல் தாக்குதலைத் தாண்டி, நேரடியாக பாதுகாப்புத் தலைமை அலுவலகத்தின் மீது மோதித் தாக்குகிறது.


இதற்கிடையே, இஸ்ரேல்  ராணுவத்தின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி, மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பதற்றங்களுக்கு ஈரானே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். X தளப் பதிவில் அவர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றங்களுக்கு ஈரானும், ஈரானும் மட்டுமே பொறுப்பு. அணு ஆயுதங்களை அடைந்து, இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து அழிக்கும் அவர்களின் நோக்கமே நம்மை இங்கு இட்டுச் சென்றது என்று கூறியுள்ளார்.


மறுபக்கம்,  ஈரானின் உயர் அதிகார தலைவர் அயதுல்லா அலி கமெனி இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஈரானின் ஆயுதப் படைகள் இஸ்ரேலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளன. சியோனிச ஆட்சி ஒரு பெரும் தவறையும், கடுமையான பிழையையும் செய்துள்ளது. ஒரு பொறுப்பற்ற செயலை செய்துள்ளது. கடவுளின் அருளால், இதன் விளைவுகள் அந்த ஆட்சியை அழிவுக்கு இட்டுச் செல்லும். ஈரானிய தேசம் அதன் மதிப்புமிக்க தியாகிகள் சிந்திய இரத்தத்திற்கு உரிய முறையில் பழி வாங்கும். எங்கள் ஆயுதப் படைகள் முழு தயார் நிலையில் உள்ளன, நாட்டின் அதிகாரிகளும் அனைத்து மக்களும் ஆயுதப் படைகளுக்கு முழு ஆதரவு தருகின்றனர் என்று  அவர் கூறியுள்ளார்.


இஸ்ரேல், ஈரான் மோதலால் உலக நாடுகள் பதட்டமடைந்துள்ளன. குறிப்பாக இந்தியா இந்த தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ளது. ஈரானிய அணு ஆயுத நிலைகள் தாக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்தியா, இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது மிகப் பெரிய போராக மாறினால் உலக அளவில் பொருளாதார பாதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

news

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்