- ஸ்வர்ணலட்சுமி
20 26 ஆம் ஆண்டின் அன்னையர் தினம் மே 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடவிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு நாள் அன்னையர்களின் அன்பு மற்றும் தியாகத்தை கௌரவிப்பதற்காக 'அன்னையர் தின'மாக கொண்டாடப்படுகிறது.
கருவில் சுமந்த நாள் முதல் அம்மாவின் அன்பு, அக்கறை,அரவணைப்பு, ஒவ்வொரு நிமிடமும், அவள் தன் குழந்தையை காப்பதற்காக அவள் எடுக்கும் கவனிப்பும், அக்குழந்தையின் முதல் பாதுகாப்பு உணர்விற்கு வித்திடுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை நம்மை வழி நடத்திச் செல்பவள் அம்மா. அவள் காட்டும் அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை. ஒரு நாள் மட்டுமல்லாது, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் மனதார கொண்டாடப்பட வேண்டியவர்கள்
"அன்னையர்."
அன்னையர் தின-Mother's day வரலாறு:
அமெரிக்காவைச் சேர்ந்த அண்ணா ஜார்விஸ் என்பவர் 1908 ஆம் ஆண்டு முதன் முதலில் அன்னையர் தின கொண்டாட்டத்தை முன்னெடுத்தார். அண்ணா ஜார்விஸ் அவரின் தாயார் ரீவிஸ் ஜார்விஸ் சமூக சேவகியாக உள்நாட்டு போர்களில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு சேவை செய்து வந்தார். நாட்டுக்கும்,வீட்டுக்கும் இவர் செய்த அளப்பரிய சேவைகளை நினைவு கூரும் வகையில் அன்னையர் தினத்தை அண்ணா ஜார்விஸ் கொண்டாடத் தொடங்கினார்.
அண்ணா ஜார்விஸ் அவரின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசு 1914 ஆம் ஆண்டு அங்கீகாரம் வழங்கியது.அன்று முதல் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாட அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து அன்னையர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உலகில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.சில நாடுகளில் மே பத்தாம் தேதியை அன்னையர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடுகிறது.
'அன்னை இன்றி அமையாது உலகு':
கருவில் சுமந்து, உயிருக்குள் அடைகாத்து, உதிரத்தை பாலாக்கி, பாசத்தில் தாலாட்டி, பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து தன் பிள்ளைகளுக்காகவே வாழும் அன்பு தெய்வம் 'அன்னை '. உலகத்தில் உள்ள அனைத்து பந்தங்களையும் தன் குழந்தைக்கு அறிமுகம் செய்பவள் அம்மா.
அன்னையர் தினமலர்:
வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு கார்னேஷன்கள் அன்னையரை கௌரவிக்கும் மலர்கள் ஆகும். எனினும் அன்னையர் தின மலர் என்பது வெள்ளை கார்னேசன் ஆகும். அண்ணா ஜார்விஸ் வெள்ளை கார்னேஷன் மலரை அதிகாரப்பூர்வ மலராக தேர்ந்தெடுத்தார். ஏனெனில்,அது அவரது தாயாருக்கு மிகவும் பிடித்த மலர். இறந்தவர்களுக்கு வெள்ளை கார்னேஷன் மலர் சமர்ப்பிக்கப்படுகிறது. இருக்கும் அன்னையரை கௌரவிக்க சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற கார்னேஷன் மலர்கள் தேர்வு செய்யப்படுகிறது.
அன்னையை எப்படி கவுரவப்படுத்தலாம்?..
அன்னை இருப்பவருக்கு அவள் ஒரு பொக்கிஷம். அன்னை இல்லாதவர்களுக்கு அவளின் நினைவுகள் ஒரு பொக்கிஷம். இருக்கும்போதே அந்த பொக்கிஷத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
"அடிமுடி தேடிப்பார் அகராதியை புரட்டிப்பார் முழுமையான அர்த்தம் அறியமுடியாத உயிர் சித்திரம் அம்மா "
"அம்மா நம் முதல் ஆசான்"
அன்னைக்காக அன்னையை நினைத்து, அன்னையர் தினத்தன்று அவரவர்க்கு இயன்ற வகையில் கௌரவப்படுத்தலாம். குடும்ப நலனுக்காக தன்னையே உருக்கி குடும்பத்தை ஒளி வீசச் செய்யும் அவள் விரும்பியதை, ஏதாவது ஒன்றை வாங்கி பரிசாக அளிப்பது சிறப்பு. அம்மாவிற்கு ஆடை, ஆபரணங்கள், அழகான உருவச் சிலைகள், ஹேண்ட் பேக், செல்போன், புத்தகங்கள், செடிகள், ஸ்வீட்,சாக்லேட், கேக், பழங்கள் என அவரவர்க்கு இயன்ற, அவளை சந்தோஷப்படுத்தும் வகையில் பரிசு கொடுத்து அவளை மகிழ்விக்கலாம்.
அனுதினமும் சமையலறையில் பிறருக்காக அன்புடன் சமைக்கும் அவளை வெளியில் அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுக்கலாம். அம்மா... நீ உட்கார்ந்து சாப்பிடு என்று ஒரு வரி போதும் அவள் முகத்தில் வரும் புன் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அன்னையர் தினத்தன்று தந்தையையும் சேர்த்து சந்தோஷப்படுத்தலாமே... அம்மா சரியாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறாயா ? சரியான நேரத்திற்கு சாப்பிடு..உடல் நலத்தை பார்த்துக்கொள் அம்மா... என்று கூறும் அந்த வார்த்தையில் இருக்கிறது அவளுடைய ஆனந்தம். ஏனெனில்,நாம் பசி என்று வார்த்தைகளால் கூறத் தேவையில்லை,நம் முகத்தைப் பார்த்த அந்த நொடியில் புரிந்து கொண்டு உணவளிக்கும் "அன்னபூரணி" அம்மா... தன் உறக்கம் மறந்து உறங்கச் செய்தவள். நாம் உலகம் உணர உயிரையும் தருபவள் நம் தாய்.
நான் என் தாய்க்கு எழுதிய இருவரி கடிதம்
அன்னையர் தினத்தன்று மட்டுமல்லாமல், அனுதினமும் அவரவர் அன்னையை போற்றி கௌரவித்து மகிழ்வோம். மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
{{comments.comment}}