சென்னை: இளைய சமுதாயத்தை சீரழிக்கும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். அலட்சியம் காட்டாமல் தமிழ்நாடு முழுவதும் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.
முன்னெப்போதையும் விட இப்போது, இன்றைய தலைமுறையினர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடிக்கு அடிமையாதவற்கு வெளிச் சூழல் ஒரு காரணம் என்றாலும், வீட்டில் இருக்கும் பெரியவர்களும் ஒரு விதத்தில் காரணமாகின்றனர். பல வீடுகளில், ஆண்கள் மது குடித்து விட்டு வீட்டில் சண்டை போடுதல், ரகளை செய்வது, மனைவியைப் போட்டு அடிப்பது, அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடுவது என்று உள்ளனர். இவற்றைப் பார்க்கும் இளைய தலைமுறையினரும் தடம் மாறி போதைப் பொருட்கள் அடிமையாகின்றனர்.

மது குடிப்பதையும், புகை பிடிப்பதையும் சாதாரணமாக கருத ஆரம்பித்து விட்டனர். பள்ளிகளுக்கு அருகிலேயே மதுக்கடைகள் இருப்பதை பார்க்கும் மாணவர்களுக்கு இது தூண்டுதலாக அமைகிறது. இதனால் மது , கஞ்சா இவையெல்லாம் வாழ்க்கையில் சாதாரணம் என்று கருதி அதை நோக்கி போகின்றனர். இது தவறு என்று உணர்த்துவதற்கு வழிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. தட்டிக் கேட்கவும் யாரும் முன்வருவதில்லை.
இந்த நிலையில்தான் தற்போது டாக்டர் ராமதாஸ் முழு மது விலக்கை கோரியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்:
விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர் நேற்று மது போதையில் பள்ளிக்கு வந்து, வகுப்பறைகளில் பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை தகாத சொற்களால் திட்டியும், பாடம் நடத்த விடாமல் தடுத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்குள் கற்களை வீசியும், நுழைவாயிலை சேதப்படுத்தியும் அவர்கள் வன்முறை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.
மாணவர்கள் தான் நாட்டின் வருங்கால மன்னர்கள். அவர்களை நம்பித் தான் அவர்களின் குடும்பங்களும், சமுதாயமும், நாடும் உள்ளது. ஆனால், அவர்கள் எந்தப் பொறுப்பும் இல்லாமல் மது அருந்தி விட்டு, தங்களுக்கு கல்வி வழங்கும் கோயிலான பள்ளிக்கூடத்தில் வன்முறையில் ஈடுபட்டிருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மது நாட்டையும், வீட்டையும் மட்டுமின்றி இளைய சமுதாயத்தையும் எந்த அளவுக்கு சீரழிக்கும் என்பதற்கு இதுவே சான்று ஆகும்.
மாணவர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கு அவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. கைக்கெட்டும் தொலைவில் மது கிடைப்பது தான் இந்த சீரழிவுக்கு காரணம் ஆகும். பேரங்கியூரில் பள்ளிக்கூடத்திற்கு மிக அருகிலேயே மதுக்கடை செயல்பட்டு வருவது தான் அந்த பள்ளி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி இரகளையில் ஈடுபட்டதற்கு காரணம் ஆகும். மாணவர்களைக் கெடுக்கும் மதுக்கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை வலியுறுத்தியும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மூடப்படவில்லை; அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்ட போதும் கூட அந்த மதுக்கடை அகற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் அனைத்து தரப்பு மக்களையும் சீரழிப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சான்றுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவை தமிழகத்தை எத்தகைய பேரழிவுக்கு அழைத்துச் செல்லும் என்பது அரசுக்கு தெரியாததல்ல. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
{{comments.comment}}