"ஆயி பரிபூரணம் அம்மாளைக் கொண்டாட வேண்டிய நேரம் இது".. சு. வெங்கடேசன் நெகிழ்ச்சி!

Jan 11, 2024,06:15 PM IST

மதுரை: ஆயி பரிபூரணம் அம்மாளின் கைகளை பற்றிக் கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதியே இல்லை. அவரைக் கொண்டாட வேண்டிய நேரம் இது என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


வடக்கே 32 வருடமாக ராமர் கோவில் கட்டும் வரை யாருடனும் பேச மாட்டேன் என்று கூறி மெளன விரதம் இருந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய மூதாட்டி குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்.. அப்படியே கட் செய்து தெற்கே மதுரைக்கு வந்தால்.. தனது பூர்வீக நிலத்தை அதுவும் ரூ. 7.50 கோடி அளவுக்கு மதிப்பிலான நிலத்தை அப்படியே தூக்கி அரசுப் பள்ளிக் கூடம் கட்டுவதற்காக கொடுத்துள்ளார் ஆயி பரிபூரணம் அம்மாள் என்ற பெண்மணி. 


கேட்கவே வியப்பாக இருக்கிறது.  கொஞ்சம் பணம், சொத்து இருந்தாலே அடித்துக் கொள்ளும் மக்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய மதிப்பு கொண்ட தனது பூர்வீக, பரம்பரை நிலத்தை நொடி கூட யோசிக்காமல் அரசிடம் கொடுத்து, கல்வியின் முக்கியத்துவத்தை உரத்துக் கூறியுள்ளார் பரிபூரணம் அம்மாள்.




கல்வி ஒன்று மட்டுமே நிலையானது.. நம்மிடம் உள்ள எல்லாமே நம்மைக் கைவிட்டாலும் படிக்கிற படிப்பு கைவிடாது.. அதுதான் உண்மையான சொத்து.. அப்படிப்பட்ட சொத்தை அடைவதற்காக பள்ளிக்கூடத்தை நாடி வரும் பிள்ளைகளுக்குத் தேவையான கட்டடத்தை என் நிலத்திலேயே கட்டிக் கொள்ளுங்கள் என்று கூறி தாய்மை உணர்வோடு தனது நிலத்தைத் தானமாக கொடுத்துள்ளார் பரிபூரணம் அம்மாள்.


அவரை இன்று நேரில் சந்தித்து பாராட்டிப் பேசினார் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன். இதுகுறித்து அவர் கூறுகையில், மதுரை கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆயி பரிபூரணம் அம்மாள் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.


ஆயி பூரணம் அம்மாவின்னுடைய கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது? ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது! 


நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடமை என நினைக்கிறேன். மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது.  சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் இராமச்சந்திரன் அவர்கள் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.  


அதேபோல் தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார்.


இப்பொழுது ஆயி பூரணம் அம்மாள் அவர்கள் ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும்.


நடுநிலைப் பள்ளியாக உள்ள இந்த அரசுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தை கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த இடத்தையும் பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் ஊழியராக தனது அன்றாடப் பணி செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மாணிக்கங்கள்!


இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது. இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தை கொண்டாட வேண்டிய நேரம் இது அந்த வகையில் தான் பூரணம் அம்மாவை மதுரையின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன் என்றார் சு. வெங்கடேசன்.


இந்த நிகழ்ச்சியில், கனரா வங்கியின் வட்டார மேலாளர் சாகு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பரிபூரணம் அம்மாளை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்