திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அழகான எழில் கொஞ்சும் காவிரிக் கரை கிராமம்தான் துளசேந்திரபுரம். திடீர் உற்சாகத்துடன் அந்தக் கிராமம் மகிழ்ச்சியாக காணப்படுகிறது.. காரணம் நம்ம கமலா ஹாரிஸ்.
ஹாரிஸ் என்ற பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டுள்ள அந்த கமலாவுக்கும், இந்தக் கிராமத்துக்கும் ஒரு தொப்புள் கொடி உறவு உள்ளது. இந்த கிராமத்தில்தான் கமலா ஹாரிஸின் தாயார் பிறந்தார். இங்கிருந்துதான் அவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் கமலா பிறந்தார். தான் அமெரிக்கராக மாறி விட்டாலும் கூட தனது மகளுக்கு தனது மண்ணின் வாசம் நீங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே கமலா என்று பெயர் சூட்டினார் அவரது தாயார்.

கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றபோது துளசேந்திர புரம் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. எங்க ஊரு புள்ளைங்க அது.. எங்க ஊருக்கே பெருமை சேர்த்திருச்சு.. எங்களுக்கெல்லாம் ரொம்பக் கெளரவமா இருக்கு.. எங்க ஊரை இப்போ உலகமே பேசுது என்று துளசேந்திரபுரம் மக்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர். இதோ இப்போது அந்தக் கிராம மக்கள் இன்னொரு உற்சாகத்திற்குத் தயாராகி விட்டனர்.
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெல்லும் வாய்ப்புகளும் இருப்பதாக கருதப்படுகிறது. அவர் வெற்றி பெற்றால் முதல் தமிழ் வம்சாவளி அமெரிக்க அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் அமெரிக்க அதிபர், முதல் கருப்பர் இன பெண் அமெரிக்க அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் அமெரிக்க அதிபர் என பல பெருமைகள் அவருக்குக் கிடைக்கும்.

இது துளசேந்திரபுரம் கிராம மக்களுக்கும் பெரும் சந்தோஷத்தை் கொடுத்துள்ளது. துணை அதிபராக அவர் ஆனபோதே தடபுடலாக அதைக் கொண்டாடினார்கள். கோவிலில் பொங்கல் வைப்பது, அன்னதானம், போஸ்டர் அடித்து மகிழ்ச்சி தெரிவிப்பது என்று கலக்கியிருந்தனர். இப்போதும் அதே போல கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர். ஊர் முழுக்க போஸ்டர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெற்றால் நமது நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும், எங்க ஊருக்கும் பெருமை கிடைக்கும். எங்க ஊரை உலகமே திரும்பிப் பார்க்கும். எங்க ஊர் பசங்க நாளைக்கு அமெரிக்கா போனால் அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கும் என்று ஊர் மக்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பிடன்தான் முதலில் களத்தில் இருந்தார். ஆனால் அவரது உடல் நலம் உள்ளிட்டவை சர்ச்சையானதால் ஜனநாயகக் கட்சியினரே அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோரி வந்தனர். இதையடுத்து ஜோ பிடன் விலகி விட்டார். தனக்குப் பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அவர் முன்மொழிந்தார். அவருக்கு கட்சியில் ஆதரவும் கிடைத்துள்ளது. செல்வாக்கும் பெருகி வருகிறது.
இதனால் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவருக்கு போட்டியாக வேறு யாரும் இதுவரை கிளம்பவில்லை. எனவே கமலா ஹாரிஸ் மக்கள் ஆதரவோடு அதிபர் தேர்தலில் வெல்வார் என்றும் ஜனநாயகக் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
என்னதான் கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் கூட அந்த தொப்புள் கொடி உறவை மறக்காமல் அதை கொண்டாடும் இந்தக் கிராமத்து மக்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். என்ன இருந்தாலும் மண் வாசம் விட்டுப் போகாது இல்லையா!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
{{comments.comment}}