அரசு பஸ்கள் நம்ம சொத்து.. சுத்தமாகவும், பத்திரமாகவும் பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை மக்களே!

May 28, 2024,05:37 PM IST

சென்னை:   தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அரசு பஸ்களை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வது தொடர்பான புகைப்படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.. அதில் ஒரு புகைப்படம் மனதைக் குடைவதாக இருந்தது.


அரசு சார்பில் நடத்தப்படும் பஸ் போக்குவரத்தும், மெட்ரோ ரயில் உள்ளிட்டவையும் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுக்கின்றன.  அரசு பஸ்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான சேவை உள்ளது. அதிக அளவிலான பஸ்களை வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான அரசு பஸ் சேவையும் உள்ளது என்பது முக்கியமானது.




மக்களின் வசதிக்காக விதம் விதமான பஸ் சேவையை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்காக கட்டணமில்லா பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தாழ்தளப் பேருந்துகள், ஏசி பேருந்துகள், ஸ்மால் பஸ்கள் என போக்குவரத்துக் கழகத்தின் சேவை மிகப் பெரிதாகும்.


முக்கிய விடுமுறைக் காலங்கள், விழாக் காலங்களில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளையும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்குகின்றன. இதனால் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் சுலபமாக செல்ல முடிகிறது. மேலும் தலைநகர் சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய நகரங்களுக்கும் இப்போது பேருந்து வசதி சிறப்பாக உள்ளதால் மக்களின் பிரயாணங்கள் மிகவும் இலகுவாகியுள்ளன.


இந்த நிலையில் ஒரு புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.  அரசு போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் பக்க ஹேன்டிலில் இப்படி ஒரு செய்தி இருந்தது..  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்க உறுதிபூண்டுள்ளது. இன்று, விழுப்புரம் கோட்டத்தின் இயக்கத்திற்குட்பட்ட  முக்கிய பேருந்து நிலையங்களான கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு, பெங்களூரு, திருப்பதி, திருச்சி, சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பேருந்து நிலையங்களில் ஒவ்வொரு நடை முடிவிலும்  பேருந்துகளின் உட்புறம் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதில் ஒரு படத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் ஏகப்பட்ட பாட்டில்கள், குப்பைகளை அள்ளுவது போன்ற காட்சி இருந்தது. அதைப் பார்த்தபோது மனதுக்குள் சின்னதாக வருத்தம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பயன்படுத்திய பொருட்களை அப்படி அப்படியே போட்டுச் செல்வதை மக்கள் தயவு செய்து தவிர்க்க வேண்டும். காரணம், இப்படிப்பட்ட குப்பைகளை கைகளால் எடுத்து சுத்தம் செய்பவரும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே. அதை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.




மேலும் பயன்படுத்தும் பொருட்களை, அதாவது குப்பைகளை தனியாக ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டு பஸ் நின்றதும், பிளாட்பார்மில் இருக்கும் குப்பைப் பெட்டியில் போடுவதை பழக்கமாக்கிக் கொள்ள நாம் முயல வேண்டும். எப்படியும் பஸ் பயணத்தின்போது தண்ணீர் குடிப்போம், ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம்.. அவற்றை கண்டிப்பாக நாம் ஏதாவது ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டால் இறங்கும்போது அதை உரிய இடத்தில் போடுவது சுகாதாரமாகவும் இருக்கும், யாருக்கும் எந்த அசவுகரியத்தையும் தராது, பஸ்களையும் சுத்தமாக வைத்துக் கொண்டது போலவும் இருக்கும்.


அரசு பஸ்கள் குப்பையாக இருக்கின்றன என்று பலர் புலம்புகிறார்கள். அதை குப்பையாக்குவதும் நாம்தான் என்பதை தாழ்மையுடன் அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நாம்தான் நமது பஸ்களை சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவை அரசின் சொத்து மட்டும் அல்ல, நமது சொத்தும் கூட. வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்க முயல்வோமோ அதேபோலத்தான் அரசு பஸ்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். அது எல்லோருக்கும் நல்லதுதானே!


குப்பைகளை முடிந்தவரை தவிர்ப்போம்.. அப்படியே குப்பை சேரும்பட்சத்தில் அதை பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவதையும் நாம் உறுதி செய்வோம்.

சமீபத்திய செய்திகள்

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்