லண்டன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பிரிட்டன், மாலத்தீவில் 4 நாள் சுற்றுப்பயணம்

Jul 23, 2025,10:41 AM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு 4 நாள் பயணத்தை மேற்கொள்கிறார். முதலில் அவர் பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் இன்று லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.


இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இங்கிலாந்து செல்கிறார். பிரதமரான பிறகு மோடி இங்கிலாந்துக்குச் செல்வது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மோடி, லண்டனில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, பருவநிலை, சுகாதாரம், கல்வி மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துப் பரிமாறிக் கொள்வார்கள்.




தனது பயணத்தின்போது, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸையும் பிரதமர் மோடி சந்திப்பார். லண்டனில் உள்ள செக்கர்ஸ் (Chequers) மாளிகையில் பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடிக்கு விருந்தளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாடுகளின் வணிகத் தலைவர்களுடனும் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக, இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இங்கிலாந்துக்குச் செல்லும் 99% இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு வரி இருக்காது. மேலும், இங்கிலாந்து நிறுவனங்கள் விஸ்கி, கார்கள் மற்றும் பிற பொருட்களை இந்தியாவுக்கு எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும். இது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கணிசமாக உயர்த்தும்.


மாலத்தீவு பயணம் (ஜூலை 25 - 26):


மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸூவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக மாலத்தீவு செல்கிறார். அதிபர் முய்ஸூ பதவியேற்ற பிறகு இந்தியத் தலைவர் ஒருவர் மாலத்தீவுக்குச் செல்வது இதுவே முதல் முறை.


ஜூலை 26 அன்று நடைபெறும் மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்.


பிரதமர் மோடி மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸூவை சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்பார். இந்தியா-மாலத்தீவு இடையே அக்டோபர் 2024 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான' கூட்டு தொலைநோக்கு பார்வையின் முன்னேற்றத்தையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள்.


இந்த பயணம், சமீபகாலமாக சற்றே இறுக்கமாக இருந்த இந்தியா-மாலத்தீவு உறவுகளை மீண்டும் மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை (Neighbourhood First Policy) மற்றும் 'சாகர் பார்வை' (Vision SAGAR - Security and Growth for All in the Region) ஆகியவற்றில் மாலத்தீவுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்