சோஷியல் மீடியாவில் விற்கப்படும் தனிமனித வாழ்க்கை!

Jun 03, 2025,01:13 PM IST

- தென்றல்


ஹலோ.. தமிழ்நாட்டில் சமூகவலைதளங்களை எட்டிப் பார்க்காத யாராவது இருக்கீங்களா? யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் என்று எதிலாவது  எல்லோருமே நம்மை இணைத்துக்கொள்கிறோம். கற்று கொள்ள.. தெரிந்து கொள்ள.. பொழுது போக்க.. என்று பல இலட்சக்கணக்கான வீடியோக்கள் அவற்றில் இருக்கின்றன! 


இராணுவ ரகசியங்களைத் தவிர மற்ற அனைத்தும் இவற்றில் கொட்டிக் கிடக்கின்றன. நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட இந்த தொழில்நுட்ப சாதனத்தின் அபார வளர்ச்சி நம்மை பிரமிக்கத்தான் வைக்கிறது.  உலகின் இண்டு இடுக்குகளிலிருந்து.. அவ்வளவு ஏன்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டி, கடைக்கோடி கிராமங்களின் சந்து பொந்திலிருந்தும் கூட வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. நீங்களும் பதிவிடுகிறீர்களா? மகிழ்ச்சி! 


காமெடி, இசை, கேம்ஸ், உணவு, அன்பாக்சிங் (unboxing), ரியாக்ஷன், கதைகள், குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், விழிப்புணர்வு, தோட்டக்கலை, டுடோரியல், சவால்கள்(challenges), அறிவியல், தொழில்நுட்பம், அழகுக்கலை, விலங்குகள் என்று எண்ணில் அடங்கா வகை வகையான வீடியோக்கள் தினமும் பதிவாகின்றன, பார்க்கப்படுகின்றன.




இதில் மிக முக்கியமானது, தனிப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்க்கையை (அனுதினமும் கூட) படம்பிடித்துப் பதிவேற்றுவது – lifestyle vlog! சினிமாவை மிஞ்சும் காட்சியமைப்பு, வசனங்களோடு படம்பிடித்து பதிவிடப்படும் இவை நன்றாகவே கல்லா கட்டுகின்றன.

இதில், அந்த சேனலின் உரிமையாளர் தலைமை கதாப்பாத்திரம் ஏற்க, அவரின் வாழ்க்கைத்துணை, புள்ளகுட்டி, பேரன்பேத்தி, மாமியார், மாமனார், வீட்டிலிருக்கும் நாய் பூனை ஆடு மாடு கோழி ஆயா, பகட்டான சமையலறை, அதிலுள்ள பாத்திரங்கள், படுக்கையறை.. என்று எதுவும் தள்ளுபடியே இல்லாமல் துணைக் கதாப்பாத்திரங்களாக.. பட்டியல் நீளுகிறது!  


சில வீடியோக்கள் காலையில் எழுந்து பல் துலக்குவதில் துவங்குகின்றன (நல்ல வேளை, காலைக்கடன் காட்சியில் வருவதில்லை) தலை வாருவது, மேக்கப் போடுவது, சமைப்பது, உண்பது, வாங்குவது, போனது வந்தது, வேலை, வீடுவாசல், குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் தகவல்கள், உடல் பிரச்சனைகள், சொத்துபத்து, சீட்டுப் பணத்தில் வாங்கும் நகைநட்டு, வாகனவசதி, பூப்புநன்னீராட்டு விழா, சீமந்தம் என்று வரைமுறையின்றி அத்தனை தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களும் வீடியோவாக உலகின் பார்வைக்கு வைக்கப்பட்டுப்படுகின்றன.   

 



எல்லாம் எதற்காக - காசு! பணம்! துட்டு! மணி! மணி!  காசு! பணம்! துட்டு! மணி! மணி!

இப்படிப் பலரும் இல்லறத்தை இணையத்தில் தான் நடத்துகிறார்கள்! 

வாழ்க்கைப் பயணத்தை யூடியூபில் தான் ஓட்டுகிறார்கள்!


வருமானத்திற்கான நல்ல தொழில்தான்! முதலீடு அதிகமில்லை, நஷ்டமடையும் வாய்ப்புமில்லை. ஆனால் எல்லைக்கோடு இல்லாது போய்க்கொண்டிருக்கிறதே என்பது தான் அறிவார்ந்த மனிதர்களின் மனவருத்தம்!


ரீலிஸ் என்ற பெயரில் அத்துமீறிய அட்டூழியங்கள் ஒருபுறமிருக்க, லைப் வ்லோக்ஸ்(life vlogs) என்ற பெயரில் சுவாரசியமாக்க, தனித்துக்காட்ட, போட்டியை சமாளிக்க, பார்வையாளர்களைக் கூட்ட, லைக்குகளை அள்ளி வரும்படியை அதிகரிக்க - நடிக்கப்படும் நாடகங்கள், புனையப்படும் காட்சிகள், அரங்கேற்றப்படும் போலித்தனங்கள் இன்றைக்கு ஏராளம் ஏராளம்!


ஒரு சாதாரண வாழ்க்கையை, குறைகளே இல்லாது கனக்கச்சிதமாய் இருப்பது போல, காண்போர் மனதில் பொறாமையைத் தூண்டும்படியாக, போலி பிம்பத்தை உருவாக்கிப் படம் பிடித்துப் பிரகடனப்படுத்துவது ஒரு   மனநோய் இல்லையா? புகழுக்காக எத்தனை எத்தனை பாசாங்குகள் பதிவிடப்படுகின்றன! 


மனித மரணம் கூட இங்கு மணி (money) தான்!          


வாழ்க்கைத் துணையின் நோய், அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை, மருத்துவச் செலவுகளை சமாளிப்பது, மற்றும் அந்த ஜீவனின்  கைகளைப் பற்றிக்கொண்டு ஆறுதல் தரும் இருவருக்கும் நடுவேயான தனிப்பட்ட ஆழமான நிமிடங்களும் கேமராவுக்குள் அடங்குவது பொதுமக்களின் பார்வைக்காகத்தான்! 




கண்ணீரையும் காசாக்குவதா? வலியும் வேதனையும் விளம்பரத்திற்கா? உங்கள் கண்ணீரின், வேதனையின் மதிப்பு இவ்வளவுதானா? யார்யாரை, எதையெதையெல்லாம் வியாபாரப் பொருளாக்குகிறீர்கள்? 


பொருளாதாரக் காரணங்கள் இல்லை என்று சொன்னால், ஒருவேளை, தங்கள் வாழ்வின் எல்லா அசைவுகளையும் சப்ஸ்கிரைப்பர்(subscriber) சொந்தங்களோடு பகிர்ந்துகொள்ள, வலிகளின் வடிகாலாக, சுயபச்சாதாபம் தேடிக்கொள்ளும் வழியாக சமுகவளைதளங்கள் ஆகிவிட்டனவா?


முகம் தெரியாத எல்லா சப்ஸ்கிரைபர்களும் தங்களின் உண்மையான நலன்விரும்பிகளா? தனிப்பட்ட உணர்வுகளைக் கொட்டும் அளவுக்கு நெருக்கமானவர்களா? என்ன சாப்பிட்டீர்கள், எப்படியிருக்கிறீர்கள், எங்கே போனீர்கள், உங்களின் மகிழ்ச்சி துக்கம் இவற்றில் எல்லாம் எத்தனை பேருக்கு நேர்மையான அக்கறை இருக்கிறது?


சாதாரணமாய் துவங்கி, ஒரு கட்டத்தில் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகி, வாழ்க்கையில் சகலத்தையும் கேமராவில் படம் பிடிக்க மனசு தூண்டுகிறது, பதிவேற்ற துடிக்கிறது. 


சைபர் குற்றங்கள் நிறைந்த இந்தக் காலத்தில், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்குகிறது என்று தெரிந்தே தான், அளவுக்கு மீறி தனிப்பட்ட வாழ்க்கைப்பகிரப்படுகிறது. 


இதில் முழுமையாக முட்டாளாக்கப்படுவது சப்ஸ்கிரைபர்கள் தான். திரைக்குப் பின்னால் உண்மையாகவே என்ன நடக்கிறது என்று தெரியாமல், தூரத்தில் தெரியும் இந்தக் கானல் நீரை நிஜம் என்று பலரும் நம்புகிறார்கள். மயங்கிப் போய் இவற்றைப் பார்ப்பதை வாடிக்கையாக்கிக் கொள்கிறார்கள்.  




இதுவும் திரைப்படம் போல ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் கட் தான்! நம் பார்வைக்கு எதைக் காண்பிக்க வேண்டுமோ அது மட்டுமே காண்பிக்கப்படுகிறது! ஸ்கிரிப்ட் முடிவு செய்யப்பட்டு, நடிக்கப்பட்டு, எடிட்டிங் செய்யப்பட்டு பதிவிடப்படுகிறது!  


நிஜங்கள் மறைக்கப்பட்டு போலி பிம்பங்கள் மினுமினுக்க வைக்கப்படுகின்றன. இங்கே மகிழ்ச்சிகள் மிகப்படுத்தப்படுகின்றன, துயரங்கள் உணர்ச்சியூட்டப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன, பகட்டு பறைசாற்றப்படுகிறது. 


மற்றவர் வாழ்க்கையை எட்டிப் பார்க்கும் ஒரு கள்ளத்தனமான சுவாரசியத்தை, மகிழ்ச்சியை உளவியல் ரீதியாக இந்த தனிப்பட்ட வாழ்க்கைப் பதிவுகள் பார்வையாளர்களுக்குக் கொடுக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.


சமூகவலைத்தளங்களில் எதைப் பகிர்வதனாலும், பார்ப்பதானாலும் அதை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தி, எல்லைக்கோட்டுக்குள் வைத்துக்கொள்வது தனி மனித வாழ்க்கைக்கும் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்.

    

(தென்றல் தொடர்ந்து வீசும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துயரத்தில் முடிந்த RCB ரசிகர்களின் கொண்டாட்டம்.. பெங்களூரில் பரபரப்பு.. நெரிசலில் 11 பேர் பலி

news

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி: நடிகர் கமல்ஹாசன் உருக்கம்

news

உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி...3 வயது சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு!

news

Thuglife: தக் லைஃப் திரைப்படம்...9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

news

அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான அறிவிப்பு..திரும்பப் பெறுக..குடியரசுத் தலைவருக்கு சுவெங்கடேசன் கடிதம்

news

வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் டென்ஷன் ஆகாமல் கூலாக இருக்கும் 7 ராசிக்காரர்கள்

news

என்னது.. ஐபிஎல் 2025 பைனலில் அனுஷ்கா அணிந்து வந்த ஜீன்ஸ் விலை ரூ.27,000 ஆ?

news

வட்டச்செயலாளருடன் பேசுவது ஒரு தவறா?. அண்ணாமலை கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

news

Rain rain come again.. மே மாதத்தில் இந்தியாவில் மழை அளவு 125 சதவீதம் அதிகரிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்