தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

Aug 26, 2026,12:35 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் (H1N1) பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தீவிர விழிப்புணர்வுடன் இருக்குமாறு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


மாநிலத்தில் கடந்த ஜனவரி மாத நிலவரப்படி பன்றிக்காய்ச்சல் பாதிப்பு 19 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது இந்த பாதிப்பு எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக இந்த வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முக்கிய அறிகுறிகள் :


பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்படுபவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அவற்றில் முக்கியமாக:




லேசான சளி மற்றும் இருமல்


காய்ச்சல் மற்றும் தலைவலி


தொண்டை வலி மற்றும் உடல் சோர்வு


இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : 


வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:


முகக்கவசம் அணிதல்: மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடங்கள் மற்றும் பேருந்துகளில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.


கைகளைச் சுத்தம் செய்தல்: அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.


சுய மருத்துவம் தவிர்க்கவும்: லேசான காய்ச்சல் அல்லது சளி இருந்தால், கடைகளில் நேரடியாக மருந்து வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.


தனிமைப்படுத்தல்: காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வது மற்றவர்களுக்குத் தொற்று பரவுவதைத் தடுக்கும்.


அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொது சுகாதாரத்துறை உறுதி அளித்துள்ளது. சுய சுகாதாரத்தைப் பேணி, உரிய நேரத்தில் மருத்துவ உதவி பெறுவதன் மூலம் பன்றிக்காய்ச்சல் பரவலை முற்றிலுமாகக் தடுக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்