சென்னை: ஆன்மீகத்திலும், கடவுள் வழிபாட்டிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், நிறுவனருமான தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமானார். 82 வயதான அவர் மேல்மருவத்தூர் சித்தர் பீட வளாகத்தில் உள்ள தனது இருப்பிடத்திலேயே மரணமடைந்தார். அவரது மறைவால் பக்தர்கள் சோகமாக உள்ளனர்.

பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களி்ல் இருந்து வந்த பக்தர்கள், பொது மக்கள், பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சக்தி பீடத்தின் அருகில் இன்று மாலை 5.30 மணிக்கு பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அவரது மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பு:
அம்மா என்று செவ்வாடை பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சித்தர் பீடத்தின் நிறுவனர் குரு திருமிகு. பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவதோடு அவரது மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் துவக்கி பெண்களே கோயிலின் கருவறைக்குள் சென்று பூசை செய்வதற்கு வழிவகுத்தார். ஆண்கள் மட்டுமே கோயிலின் கருவறைக்குள் நின்று பூசை செய்யமுடியும் என்கிற நெடுங்காலத்து நடைமுறையை மாற்றி பெண்களைப் பூசை செய்ய வைத்ததோடு, மாதவிடாய்க் காலத்திலும் கோயிலில் சென்று வழிபடலாம் என்கிற அவரது நிலைபாடு ஆன்மீகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அது வெகுவாகப் பெண்களை ஈர்த்தது மட்டுமின்றி ஆன்மீகத்திலும் வழிபாட்டிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தியது. இது பக்தியை சனநாயகப்படுத்திய ஆன்மீகப்புரட்சி என்று கூறத்தக்கதாகும். ஆன்மீகப் பணியோடு பல்வேறு கல்வி நிறுவனங்களை உருக்கி கல்விப் பணிகளையும் அவர் மேற்கொண்டார். கல்வியில் பின் தங்கியிருந்த செங்கல்பட்டு உள்ளிட்ட அப்பகுதி தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய அளவில் ஆன்மீகத்தின் ஒரு மாற்று அடையாளமாகத் திகழ்ந்தவர்; சனாதனப் பாதையைத் தவிர்த்து இந்து மதத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியவர். அத்தகைய சிறப்புகளுக்குரிய அடிகளாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவருக்கு எமது அஞ்சலியைத் செலுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}