வாழ்வின் விடைதெரியாத மர்மங்கள்.. நியாயங்களைத் தேடும் மனங்கள்!

Jan 24, 2026,01:18 PM IST

- டி.கலைமணி


வாழ்க்கை என்பது ஒரு திறந்த புத்தகம் என்பார்கள். ஆனால், அந்தப் புத்தகத்தின் பல பக்கங்கள் நமக்கு இன்னும் புரியாத புதிர்களாகவே இருக்கின்றன. நாம் எதை "சரி" என்று நினைக்கிறோமோ, அது சில நேரங்களில் தவறாக முடிவதையும்; எதை "தவறு" என்று ஒதுக்குகிறோமோ, அது சில இடங்களில் கோலோச்சுவதையும் பார்க்கும்போது மனம் திகைத்து நிற்கிறது. 


மனித மனசாட்சியைத் துளைக்கும் விடைதெரியாத எட்டு கேள்விகள் என்னையும் துளைத்தன.. இதைப் படித்துப் பாருங்கள்.. உங்களுக்காவது விடை தெரிகிறதா என்று பார்ப்போம்.


1. .எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் திடீரென அகால மரணம் அடைவது ஏன்?




எந்தவிதமான தீய பழக்கங்களும் இன்றி, உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்திருப்பவர்கள் சில நேரங்களில் மிகக் குறுகிய காலத்திலேயே இவ்வுலகை விட்டுப் பிரிவதைக் காண்கிறோம். "நல்லவர்களுக்கு ஆயுள் குறைவு" என்ற பொதுப்புத்தி உண்மையாகிப் போகும்போது, இயற்கையின் நீதி எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.


2. யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள் அதிகமாக காயப்படுவது ஏன்?


யாரையும் சொல்லால் கூட காயப்படுத்தக் கூடாது என்று ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பவர்கள், மற்றவர்களால் அதிகம் காயப்படுத்தப்படுகிறார்கள். மென்மையான இதயம் கொண்டவர்களையே இந்த உலகம் குறிவைத்துத் தாக்குவது காலத்தின் முரண்பாடு.


3. சுற்றமும், நட்பும் அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப்படுத்தபடுவது ஏன்?


நட்பும் சுற்றமும் சூழ வாழ வேண்டும், எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று ஏங்குபவர்களே பல நேரங்களில் கூட்டத்தில் தனித்து விடப்படுகிறார்கள். அன்பு அதிகம் கொண்டவர்கள் ஏன் தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது புரியாத புதிர்.


4. இளகிய மனதுடன் பிறருக்கு  உதவியவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்?


தனக்கு இருப்பதை விடவும் பிறரது தேவையை முதன்மையாகக் கருதி, இளகிய மனதுடன் உதவி செய்பவர்கள், அதே மனிதர்களால் நன்றியின்றி ஏமாற்றப்படுகிறார்கள். பிறர் துயர் துடைப்பவர்களின் வாழ்வில் ஏமாற்றம் என்பது நிரந்தர நிழலாகத் தொடர்வது ஏனோ?


5. எந்த வித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்?


வீண் செலவுகள் செய்யாமல், ஆடம்பரங்களைத் தவிர்த்து, உழைப்பை மட்டுமே நம்பி வாழும் சிலர் வாழ்நாள் முழுவதும் பொருளாதாரப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். சேமிக்கும் கைகளை விட, செலவழிக்கும் கைகளே சில நேரங்களில் வலுவாக இருக்கின்றன.


6. அகம்பாவமும், ஆணவமும் அலட்சிய மனோபாவமும் கொண்ட சிலர் செல்வந்தராக இருப்பது ஏன்?


அகம்பாவமும், ஆணவமும், மற்றவர்களைத் துச்சமாக மதிக்கும் அலட்சியப் போக்கும் கொண்ட சிலர் செல்வச் செழிப்பில் திளைப்பதைக் காண்கிறோம். மனிதாபிமானம் இல்லாதவர்களிடம் செல்வம் ஏன் தஞ்சமடைகிறது என்பது சாமானியர்களின் தீராத சந்தேகம்.


7. எந்த வித கெட்ட எண்ணமும் இல்லாதவர்களுக்கு வாழ்வில் கஷ்டங்கள் அதிகமாக வருவது என்?


பிறருக்குத் தீமை நினைக்காத, தூய்மையான எண்ணம் கொண்டவர்களின் வாழ்வில் சோதனைகள் மட்டும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. "நல்லவர்களுக்குத்தான் சோதனைகள் வரும்" என்ற ஆறுதல் மொழி, ஒரு கட்டத்தில் வலியாகவே மாறிவிடுகிறது.


8. கணக்கில்லாமல் பணம் வைத்திருக்கும் பலருக்கு நன்மைகள் செய்யும் எண்ணம் வருவதில்லையே ஏன் ? ஏன்? ஏன்?


கணக்கில்லாத செல்வம் வைத்திருக்கும் பலருக்கு, ஒரு சிறு உதவியைச் செய்யும் எண்ணம் கூட வருவதில்லை. தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்க மனமில்லை, மனம் உள்ளவர்களுக்குக் கொடுக்க செல்வமில்லை - இந்த முரண்பாடு ஏன் இவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது?


இந்த எட்டு கேள்விகளும் வெறும் கேள்விகள் அல்ல; இவை வாழ்வின் நிதர்சனங்கள். இதற்கான விடைகள் காலத்தின் கைகளில் இருக்கலாம் அல்லது கர்ம வினைத் தத்துவங்களில் ஒளிந்திருக்கலாம். இருப்பினும், விடைகள் கிடைக்காவிட்டாலும், 'நல்லது செய்தல்' என்ற நம் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதே மனிதத்தின் உண்மையான வெற்றி.


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி 64 வயதுக்காரர். பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், தன்னம்பிக்கைக் கதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

If you want to be successful do this first!

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

செப்.19-ல் திமுக முப்பெரும் விழா நடைபெறும்: கட்சி தலைமை அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: தவெக, திமுக வேட்புமனுக்கள் ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்